Published : 01 Feb 2020 10:37 AM
Last Updated : 01 Feb 2020 10:37 AM
டெல்லியில் துப்பாக்கி வாங்க வேண்டுமென்றால், 19 வகையான ஆவணங்களைச் சமர்ப்பித்தால் கிடைத்துவிடும். ஆனால், ஒரு ஹோட்டல் தொடங்க ஒரு முதலீட்டாளர் நினைத்தால் அவர் 45 விதமான ஆவணங்களைத் தாக்கல் செய்யும் நிலைதான் இருக்கிறது. இதனால்தான் தொழில்தொடங்க உகந்த நாடுகளில் இந்தியா பின்தங்கி இருக்கிறது என்று தலைமைப் பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் தெரிவித்தார்.
2019-20 ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதன்பின் நிருபர்களுக்குத் தலைமைப் பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
பொருளாதாரத்தில் வளங்களை உருவாக்குவதில் முக்கிய அம்சங்களில் ஒன்று பொருளாதாரச் சுதந்திரம். ஆனால், இங்கு எளிதாக தொழில் தொடங்கும் சூழல் உண்மையில் சிக்கலாக இருக்கிறது. இருப்பினும் எளிதாகத் தொடங்கும் விஷயத்தில் இந்தியா பல்வேறு விஷயங்களில் சமீபகாலத்தில் முன்னேறியிருக்கிறது. ஆனால், பல பிரிவுகளில் இன்னும் பின்தங்கித்தான் இருக்கிறது.
டெல்லியில் நீங்கள் ஒரு துப்பாக்கி உரிமம் வாங்க வேண்டுமென்றால் 19 ஆவணங்கள் அளித்தால் வாங்கி விடலாம். ஆனால் ஒரு ஹோட்டல் தொடங்குவதற்கு 45 ஆவணங்கள் தேவைப்படுகிறது. இந்தியாவில் புதிய நிறுவனத்தைத் தொடங்க 18 நாட்கள் சராசரியாகத் தேவை. 10 விதமான கட்டங்களைத் தாண்ட வேண்டும். ஆனால் நியூசிலாந்தில் தொழில் தொடங்க அரை நாள் போதுமானது. ஒரேயொரு விண்ணப்பம் போதும். மறுநாள் நீங்கள் தொழில் நிறுவனம் தொடங்கிவிடலாம்.
பொருளாதார ஆய்வறிக்கையில், வழங்கப்பட்ட முக்கிய ஆலோசனையில், தொழில் தொடங்க ஏதுவான சூழல் உள்ள நாடுகளில் இந்தியா முன்னேற அதிகமான முக்கியத்துவம் தேவை என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவுடன் ஒப்பிடும்போது, சீனாவில் 1.4 நாள், இந்தோனேசியாவில் 1.2 நாள், பிரேசிலில் 2.2 நாள் காத்திருந்தாலே தொழில் தொடங்க அனுமதி கிடைத்துவிடும். தொழில் தொடங்க ஏதுவான சூழல் உள்ள 190 நாடுகளில் இந்தியா தற்போது 163-வது இடத்தில் பின்தங்கி இருக்கிறது. இந்தியாவைக் காட்டிலும், ஆப்கானிஸ்தான், மொசாம்பிக், ஜிம்பாப்வே ஆகிய நாடுகள் மோசமாக இருக்கின்றன.
ஒரு ஹோட்டல் தொடங்க சிங்கப்பூரில் 4 ஆவணங்கள் போதுமானது. இந்தியாவில் ஏராளமான கட்டாய ஆவணங்கள் தேவை. டெல்லியில் 26 ஆவணங்களும், பெங்களூரில் 36 ஆவணங்களும், மும்பையில் 22 ஆவணங்களும் தேவைப்படுகிறது''.
இவ்வாறு கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT