

டெல்லியில் பாஜக ஆட்சிக்கு வந்தால் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பயிலும் மாணவிகளுக்கு எலெட்ரிக் ஸ்கூட்டர் வழங்கப்படும் என சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. 70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டப்பேரவையின் பதவிக்காலம் பிப்ரவரி மாதம் 22-ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, புதிய அரசை தேர்வு செய்வதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் தேதி: பிப்ரவரி 8-ம் தேதி டெல்லி சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 11-ம் தேதி நடைபெறுகிறது. வேட்புமனுத்தாக்கல் நாளை தொடங்குகிறது. பல்வேறு கட்சிகளும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன.
இந்தநிலையில், பாஜகவின் தேர்தல் அறிக்கையை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இன்று வெளியிட்டார். அந்த தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
டெல்லியில் பாஜக ஆட்சிக்கு வந்தால் மத்திய அரசின் மருத்துவ காப்பீட்டு திட்டமான ஆயுஷ்மான பாரத் திட்டம் செயல்படுத்தப்படும்.
பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பயிலும் மாணவிகளுக்கு எலெட்ரிக் ஸ்கூட்டர் வழங்கப்படும். மற்ற பள்ளி மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கப்படும்.
ரேஷன் கடைகள் மூலம் ஒரு கிலோ கோதுமை 2 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும்.
வீடுகளுக்கு சுகாதாரமான குடிநீர் பைப்லைன் மூலம் வழங்கப்படும்.
வீடில்லாதவர்களுக்கு புதிய வீடு கட்டித்தரப்படும்.
இவ்வாறு தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.