பிரசாந்த் கிஷோர் எங்கள் கட்சியில் இணைய வேண்டும்: லாலு மகன் அழைப்பு

தேஜ் பிரதாப் யாதவ்
தேஜ் பிரதாப் யாதவ்
Updated on
1 min read

பிரசாந்த் கிஷோர் எங்கள் கட்சியில் இணைய வேண்டும் என லாலு பிரசாத்தின் மகன் தேஜ் பிரதாப் யாதவ் அழைப்பு விடுத்துள்ளார்.

குடியுரிமைச் சட்ட விவகாரத்தில் பிரசாந்த் கிஷோருக்கும், பிஹார் முதல்வரும், ஐக்கிய ஜனதாதளக் கட்சியின் தலைவரான நிதிஷ் குமாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் கட்சிக்குள் பெரிய அளவில் குழப்பம் ஏற்பட்டது. குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக பிரசாந்த் கிஷோர் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறார்.

இதையடுத்து ஐக்கிய ஜனதாதள கட்சியின் மூத்த தலைவர் அலோக் வர்மா பிரசாந்த் கிஷோரை கடுமையாக விமர்சித்தார். அவர் கூறுகையில் ‘‘பிரசாந்த் கிஷோர் கட்சியில் இருக்க நினைத்தால் இருக்கலாம். அவர் கட்சியை விட்டு போக நினைத்தால் போகலாம். காங்கிரஸூக்கு ஆலோசனை கூறுகிறார்.

பின்னர் ஆம் ஆத்மி ஆலோசனை வழங்குகிறார். மம்தா பானர்ஜி வெற்றிக்கு உழைக்கிறார். இவரை யார் நம்புவார்கள். கரோனா வைரஸ் விரைவில் எங்களை விட்டு அகலும்’’ எனக் கூறியிருந்தார். இந்தநிலையில் பிரசாந்த் கிஷோர் ஐக்கிய ஜனதாதளக் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளாரர்.

இந்தநிலையில் பிரசாந்த் கிஷோர் ராஷ்ட்ரீய ஜனதாதளக் கட்சியில் இணைய வேண்டும் என அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் மகனுமான தேஜ் பிரதாப் யாதவ் அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘பிரசாந்த் கிஷோர் குடியுரிமைச் சட்டம் தொடர்பாக தெரிவித்த கருத்துகள் சரியானவை. அதனை ஏற்க முதல்வர் நிதிஷ்குமாருக்கு மனமில்லை. மக்கள் விரோத கொள்கைகளை செயல்படுத்தும் பாஜகவுக்கு துணையாக இருக்கும் நிதிஷ்குமாருக்கு மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள். பிரசாந்த் கிஷோர் எங்கள் கட்சியில் இணைய வேண்டும்’’ எனக் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in