

கன மழை மற்றும் வெள்ள பாதிப்பு நிலைமைகளுக்கு மேற்கு வங்க மாநிலத்தின் தெற்குப் பகுதிகளில் 39 பேர் பலியாகியுள்ளனர்.
மாநிலம் முழுதும் சுமார் 33,000 பேர் 700 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
2 ஹெக்டேர் நிலங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. சுமார் 5 லட்சம் குடிநீர் பாக்கெட்டுகள் இதுவரை விநியோகிக்கப்பட்டுள்ளன.
சனிக்கிழமையான இன்றும் கொல்கத்தாவில் கனமழை பெய்து வருகிறது. ஆனால் இதுவரை உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. இன்று காலை 8.30 மணி வரை கொல்கத்தாவில் 117.4 மிமீ மழை பதிவாகியுள்ளது.
கோமென் என்ற புயல் வலுவிழந்தது, இதன் விளைவாக கனமழை பெய்து வருகிறது.
தெற்குப் பகுதியான பெஹாலா மற்றும் வைஷ்ணப்தா ஆகிய இடங்களில் சாலைகளில் முழங்கால் அளவு தண்ணீர் தேங்கியுள்ளது. மேலும் அப்பகுதி மக்களின் அன்றாட வாழ்வு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மாறாக கிழக்குப் பகுதிகளில் மக்கள் ஆட்டோக்களுக்கு பெரிய தொகையைக் கொடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
கொல்கத்தா மத்திய பகுதியில் ஆம்ஹெர்ஸ்ட் தெரு மற்றும் சில சாலைகள் ஆறுபோல் காட்சியளிக்கின்றன. தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கியிருப்பதால் ரயில் சேவைகளும் முடக்கப்பட்டன.
அடுத்த 48 மணி நேரத்துக்கும் மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.