

பாஜகவைச் சேர்ந்த பர்வேஷ் வர்மா டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை ‘பயங்கரவாதி’ என்று கூறியதற்கு டெல்லி முதல்வர் பதிலடி கொடுத்துள்ளார்.
அதாவது, நான் பயங்கரவாதியா அல்லது டெல்லி மக்களின் மகனா என்பதை தேர்தலில் மக்கள் தீர்ப்புக்கு விட்டு விடுகிறேன் என்று கூறினார் கேஜ்ரிவால்.
செய்தியாளர்களிடம் பேசிய அரவிந்த் கேஜ்ரிவால், “ஊழலுக்கு எதிராகப் போராட இந்திய வருவாய் சேவை அதிகாரி பொறுப்பைத் துறந்தேன், எந்த பயங்கரவாதியும் இதனைச் செய்வாரா?
பாஜக என்னை பயங்கரவாதி என்று அழைக்கிறது, என் வாழ்நாள் முழுதும் நான் மக்களுக்காகவே போராடி வருகிறேன், ஒவ்வொரு நாளும் மக்களுக்காகவும் நாட்டுக்காகவும் பணியாற்ற முயற்சி செய்கிறேன். நம் குழந்தைகளுக்கு நான் நல்ல கல்வியை அளித்துள்ளேன். இது என்னை பயங்கரவாதியாக்கி விட்டதோ?
உயர்மட்டத்தில் இருக்கும் சிலரின் ஊழல்களை அம்பலப்படுத்தினேன், சர்க்கரை நோய் இருந்தும், வாழ்க்கையைப் பணயம் வைத்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டேன். அவர்கள் எனக்கு பிரச்சினைகள் ஏற்படுத்துவதையே செய்து வருகின்றனர்
எனவே நான் பயங்கரவாதியா அல்லது டெல்லி மக்களின் சகோதரனா, மகனா என்ற முடிவை மக்களிடத்தில் விட்டு விடுகிறேன். ” என்றார் கேஜ்ரிவால்.
பிப்ரவரி 8ம் தேதி டெல்லியில் சட்டமன்றத் தேர்தல் நடக்கிறது, பிப்ரவரி 11ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன.