Published : 30 Jan 2020 07:08 AM
Last Updated : 30 Jan 2020 07:08 AM

தேர்தல் பிரச்சாரத்தில் சர்ச்சைக்குரிய பேச்சு: மத்திய அமைச்சருக்கு ஆணையம் நோட்டீஸ்

புதுடெல்லி

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக மத்திய இணை அமைச்சர் அனுராக் தாக்குர், பாஜக எம்.பி. பர்வேஷ் வர்மா ஆகியோருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

டெல்லி சட்டப்பேரவைக்கு பிப்ரவரி 8-ம் தேதி நடக்கிறது. ரித்தாலா தொகுதியில் பாஜகவை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்த மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாக்குர் ‘தேசத்துரோகிகளை சுட்டுத் தள்ளவேண்டும்’ என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக சமூக வலைத்தளங்களில் வீடியோ காட்சிகள் வெளியானது. இதேபோல, டெல்லி மேற்கு தொகுதி எம்.பி. பர்வேஷ் வர்மாவும் தேர்தல் பிரச்சாரத்தில் ‘குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்கள், வீடுகளுக்குள் புகுந்து கொலைகளையும், பெண்களை பாலியல் பலாத்காரமும் செய்வார்கள்’ என்று பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

விதிமுறைகளை மீறி வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக இருவர் மீதும் தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

இது தொடர்பாக வியாழக்கிழமை முற்பகலுக்குள் விளக்கம் அளிக்குமாறு அமைச்சர் அனுராக் தாக்குருக்கும், பாஜக எம்.பி. பர்வேஷ் வர்மாவுக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. விளக்கம் அளிக்கத் தவறினால் தேர்தல் ஆணையமே முடிவு எடுக்கும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. இருவரையும் பாஜகவின் நட்சத்திர பிரச்சாரகர்கள் பட்டியலில் இருந்து நீக்கியும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பதிவில், ‘பாஜக தலைவர்களின் பேச்சுக்கள் திகைக்க வைக்கிறது. நாகரிகமான அரசியல் பேச்சுக்களுக்கு அவர்கள் விடைகொடுத்துவிட்டனர். பாஜக தலைவர்களின் மோசமான பேச்சுக்களை பிரதமர் மோடி கண்டிக்காதது ஏன்? டெல்லி தேர்தலில் பாஜக தோல்வியை சந்திக்கப்போகிறது என்பதையே பாஜக தலைவர்களின் பேச்சுகள் காட்டுகின்றன’ என்று கூறியுள்ளார்.

இதனிடையே, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில், ‘‘தேர்தல் ஆணையத்தின் உத்தரவை பரிசீலித்த பிறகுதான் கருத்து தெரிவிக்க முடியும். பாஜக ஒரு சிந்திக்கக் கூடிய கட்சி என்ற வகையில், ஏதேனும் தவறு நடந்திருந்தால் அதை பரிசீலித்து ஏற்றுக் கொள்வோம். சமநிலையான நேர்மறை தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக ஈடுபட்டு வருகிறது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x