Published : 29 Jan 2020 11:20 AM
Last Updated : 29 Jan 2020 11:20 AM
2012-ம் ஆண்டில் டெல்லியில் நிர்பயா பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளி முகேஷ் குமார் தனது கருணை மனு நிராகரிப்பை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அந்த மனுவைத் தள்ளுபடி செய்தது.
முகேஷ் குமார் ஏற்கனவே சீராய்வு மனுத் தாக்கல் செய்து அதுவும் நிராகரிக்கப்பட்டு, கருணை மனுவும் நிராகரிக்கப்பட்டு,தற்போது கருணை மனு நிராகரிப்புக்கு எதிரான மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டதால்,சட்டத்தின் அனைத்து கதவுகளும் அடைக்கப்பட்டன.
கடந்த 2012-ம் ஆண்டு டெல்லி மருத்துவக் கல்லூரி மாணவி, ஓடும் பேருந்தில் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டுத் தூக்கி வீசப்பட்டார். அதன்பின் தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார்.
இந்த வழக்கில் முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்சய் குமார் ஆகிய 4 பேருக்கு மரண தண்டனை விதித்து 2013-ம் ஆண்டு செப்டம்பரில் டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங் தாக்கல் செய்த கருணை மனுவையும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த 17-ம் தேதி நிராகரித்தார். இதைத் தொடர்ந்து குற்றவாளிகள் 4 பேருக்கும் பிப்ரவரி 1-ம் தேதி காலை 6 மணிக்குள் தூக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என டெல்லி விசாரணை நீதிமன்றம் டெத் வாரண்ட் பிறப்பித்துள்ளது.
இதில் குற்றவாளிகள் வினய் குமார், அக்சய் குமார் ஆகியோர் ஏற்கெனவே தங்களின் தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுத் தாக்கல் செய்தனர். அம்மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
இந்நிலையில், மற்றொரு குற்றவாளியான முகேஷ் குமார் சார்பில் அவரின் வழக்கறிஞர் ஏ.பி.சிங் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ''தனக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையைக் குறைக்கக் கோரி குடியரசுத் தலைவரிடம் கருணை மனுத் தாக்கல் செய்தேன். அதையும் அவர் நிராகரித்துவிட்டார். குடியரசுத் தலைவர் கருணை மனுவை நிராகரித்தது குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்" எனத் தெரிவித்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் ஆர்.பானுமதி, அசோக் பூஷன், ஏ.எஸ்.போபண்ணா தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரிக்கப்பட்ட நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் ஆர்.பானுமதி, அசோக் பூஷன், ஏ.எஸ்.போபண்ணா தலைமையிலான அமர்வு இன்று இந்த மனு மீது அளித்த தீர்ப்பில், " குடியரசுத் தலைவர் கருணை மனுவை முறையாகத்தான் பரிசீலித்துள்ளார். அவரின் மனதை முழுமையாகச் செலுத்தி சீரிய ஆய்வுக்குப் பின்பே அவர் நிராகரித்துள்ளார்.
கீழமை விசாரணை நீதிமன்றம், உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் ஆகியவை அளித்த அனைத்துத் தீர்ப்புகள் ஆவணங்களும் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டன. அவர் அனைத்தையும் பரிசீலித்த பின்புதான் மனுவை நிராகரித்துள்ளார். சிறையில் அனுபவித்த கொடுமைகள், பாதிப்புகளை வைத்து கருணை மனு நிராகரிப்பை எதிர்த்து முறையிட முடியாது. ஆதலால், மனுவைத் தள்ளுபடி செய்கிறோம்" என தீர்ப்பளித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT