Last Updated : 28 Jan, 2020 12:37 PM

 

Published : 28 Jan 2020 12:37 PM
Last Updated : 28 Jan 2020 12:37 PM

சபரிமலை வழக்கு;10 நாட்கள் மட்டுமே விசாரணை நடக்கும்: உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

சபரிமலையில் பெண்கள் அனுமதிப்பது உள்ளிட்ட மதவழிபாட்டு தலங்களில் பெண்களுக்குப் பாகுபாட்டு காட்டப்படுவதற்கு எதிரான வழக்கு ஆகிய அனைத்து வழக்குகள் மீதும் 10 நாட்கள் மட்டுமே விசாரணை நடத்துவோம் என்று 9 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு இன்று தெரிவித்தது

கேரளாவின் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் செல்ல அனுமதியில்லை. இந்த நடைமுறையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த அரசியல் சாசன அமர்வு, அனைத்து வயது பெண்களும் சபரிமலை கோயிலுக்குச் செல்லலாம் என்று கடந்த 2018 செப்டம்பர் 28-ம் தேதி தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் 65 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதனை விசாரித்த 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, 7 நீதிபதிகள் அமர்வுக்கு வழக்கை மாற்ற வேண்டும் என்று கடந்த ஆண்டு நவம்பர் 14-ம் தேதி தீர்ப்பு வழங்கியது.

சபரிமலை விவகாரம் மட்டுமின்றி, மசூதிகளில் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படுவது, பார்சி பெண்கள் வேறு சமுதாய ஆண்களைத் திருமணம் செய்யும்போது அவர்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுவது குறித்தும் புதிய அமர்வு விசாரிக்கும் என்று தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் சபரிமலை வழக்கை 9 நீதிபதிகள் அமர்வு விசாரிக்கும் என்றும் ஜனவரி 13-ம் தேதி முதல் விசாரணை தொடங்கும் என்றும் உச்ச நீதிமன்றம் அண்மையில் அறிவித்தது.

இதன்படி தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள் பானுமதி, அசோக் பூஷண், நாகேஸ்வர ராவ், சந்தானகவுடர், எஸ்.ஏ.நசீர், சுபாஷ் ரெட்டி, கவாய், சூரிய காந்த் ஆகியோர் அடங்கிய 9 நீதிபதிகள் அமர்வு முன்பு கடந்த 13-ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தது.

தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு கூறுகையில், " இந்த வழக்கில் மனுத்தாக்கல் செய்துள்ள 4 மூத்த வழக்கறிஞர்கள் வரும் 17-ம் தேதி ஒன்றுகூடிப் பேசி மதவழிபாட்டு தலங்களில் பெண்களுக்கு காட்டுப்படும் பாகுபாடு, சபரிமலை விவகாரம் ஆகியவை குறித்த பிரச்சினைகளை முடிவு செய்து எங்களிடம் தெரிவிக்க வேண்டும். சபரிமலை ஐயப்பன் கோயில் வழக்கை விசாரிக்கப்போவதில்லை. 5 நீதிபதிகள் அமர்வு என்ன பிரச்சினைகளை அடையாளம் காட்டியதோ அதை விசாரிக்க இருக்கிறோம். வழக்கறிஞர்கள் தங்களுக்குள் அமர்ந்து பேசி 3 வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும்" எனத் தெரிவித்தது

இந்நிலையில் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையில் நீதிபதிகள் பிஆர் காவே, சூர்யகாந்த் ஆகியோர் கொண்ட அமர்வுமுன் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது சொலிசிட்டர் ஜெனரல்துஷார்மேத்தா கூறுகையில், " நீதிமன்றம் முன்கூட்டி கூறியதைப் போல், வழக்கறிஞர்கள் சந்தித்துப் பேசி பொதுவான கேள்விகளை ஆராய அறிவுறுத்தியது.

ஆனால், எங்களால் பொதுவான கேள்விகளை ஆலோசிக்க முடியவில்லை. உச்ச நீதிமன்றமே கேள்விகளை வகுக்கலாம். மற்ற வழக்கறிஞர்களுடன் தொடர்ந்து பேசுகிறேன்" எனத் தெரிவித்தார்

இதற்குத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அமர்வு கூறுகையில், " இந்த வழக்கில் நாங்கள் விசாரிக்கப்போகும் கேள்விகள் அனைத்தும் சட்டப்பூர்வமானவை, இந்த வழக்கை விசாரிக்க அதிகமான காலம் எடுத்துக்கொள்ளமாட்டோம். அதிகபட்சமாக 10 நாட்களுக்கு மேல் எடுத்துக்கொள்ளமாட்டோம். சிலர் அதற்கு அதிகமான காலஅவகசாசம் கேட்டால், அதற்கு நாங்கள் அனுமதி வழங்க மாட்டோம்" எனத் தெரிவித்தனர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x