Published : 27 Jan 2020 12:13 PM
Last Updated : 27 Jan 2020 12:13 PM
2012-ல் டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள 4 குற்றவாளிகளில் ஒருவர் தாக்கல் செய்த கருணை மனு நிராகரிக்கப்பட்டதற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுவை அவசரமாக விசாரிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்
கடந்த 2012-ம் ஆண்டு டெல்லி மருத்துவக் கல்லூரி மாணவி, ஓடும் பேருந்தில் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டுத் தூக்கி வீசப்பட்டார். அதன்பின் தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார்.
இந்த வழக்கில் முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்சய் குமார் சிங் ஆகிய 4 பேருக்கு மரண தண்டனை விதித்து 2013-ம் ஆண்டு செப்டம்பரில் டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரித் தாக்கல் செய்த மறு ஆய்வு மனு, சீராய்வு மனு ஆகியவற்றை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங் தாக்கல் செய்த கருணை மனுவையும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த 17-ம் தேதி நிராகரித்தார். இதைத் தொடர்ந்து குற்றவாளிகள் 4 பேருக்கும் பிப்ரவரி 1-ம் தேதி காலை 6 மணிக்குள் தூக்குத் தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என டெல்லி விசாரணை நீதிமன்றம் டெத் வாரண்ட் பிறப்பித்துள்ளது
இந்நிலையில், குற்றவாளி முகேஷ் சிங் சார்பில் வழக்கறிஞர் விரிந்தா குரோவர் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனுத் தாக்கல் செய்தார். அதில், " தனக்கு வழங்கப்பட்ட தூக்குத் தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த சீராய்வு மனுவைத் தள்ளுபடி செய்தது. அதைத் தொடர்ந்து குடியரசுத் தலைவரிடம் கருணை மனுத் தாக்கல் செய்தேன். அதையும் அவர் நிராகரித்துவிட்டார். குடியரசுத் தலைவர் கருணை மனுவை நிராகரித்தது குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்" என மனுவில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் குடியரசு தலைவர் கருணை மனுவை நிராகரித்தது தொடர்பாகத் தாக்கல் செய்த மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும், பிப்ரவரி 1-ம் தேதி குற்றவாளிக்குத் தூக்குத் தண்டனை நிறைவேற்றப் போகிறார்கள் எனக் கோரி குற்றவாளியின் தரப்பு வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் இன்று மனுத்தாக்கல் செய்தார்.
இந்தமனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் பிஆர் காவே, சூர்யகாந்த் ஆகியோர் முன்னிலையில் இன்று காலை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ,போப்டே கூறுகையில், " யாரேனும் ஒருவர் தூக்கிலிடப்போகிறார் என்றால், அந்த மனுவை விசாரிப்பதைக் காட்டிலும் வேறு முக்கியமான மனு ஏதும் இருக்க முடியாது.
பிப்ரவரி 1-ம் தேதி யாரேனும் தூக்கிலிடப்படுகிறார்கள் என்றால் அந்த மனுவுக்குத்தான் அதிகமான முக்கியத்துவம் அளிப்போம். ஆதலால், நீங்கள்(வழக்கறிஞர்) பட்டியலிடம் அதிகாரியை உடனடியாகச் சந்தித்து விவரங்களைச் சொல்லுங்கள். இந்த வழக்கிற்குத்தான் அதிகமான முன்னுரிமை வழங்கப்படும்" எனத் தெரிவித்தார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT