Published : 26 Jan 2020 05:08 PM
Last Updated : 26 Jan 2020 05:08 PM
நடிகர் பிரகாஷ் ராஜ், கம்யூனிஸ்ட் தலைவர் பிருந்தா காரத், முன்னாள் முதல்வர் ஹெச்டி குமாரசாமி ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
சங்பரிவார் அமைப்புகளைத் தொடர்ந்து இவர்கள் எதிர்த்து வருவதாலும், பேசி வருவதாலும் கொலை செய்யப்படுவார்கள் என்று மிரட்டலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மிரட்டல் கடிதத்தை நடிகர் பிரகாஷ் ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். கையால் கன்னட மொழியில் அந்த மிரட்டல் கடிதம் எழுதப்பட்டுள்ளது.
சமூக ஆர்வலர், மதவாத அமைப்புகளுக்கு எதிராகப் போராடி வரும் நிஜகுணந்த சுவாமியை குறிப்பிட்டு இந்த கடிதம் எழுதப்பட்டுள்ளது.
" அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 29 பேரும் வரும் 29-ம் தேதி முதல் உறுதியாகக் கொல்லப்படுவார்கள் என மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த 29 பேரையும் கொல்வதற்கு(ஷம்ஹாரம்) சரியான முகூர்த்தம் பார்க்கப்படும். 29-ம்தேதி முதல் இந்த 29 தேசத்துரோகிகளும் கொல்லப்படுவார்கள்.
உங்களுடைய கடைசி பயணத்துக்குத் தயாராகுங்கள். நீங்கள் தனியாக இல்லை. இந்த பட்டியலில் இருப்பவருடன் சேர்ந்து கடைசி பயணத்துக்குத் தயாராகுங்கள். நீங்கள் நிச்சயமாக அகற்றப்படுவீர்கள் " என அடையாளம் தெரியாதவர்களால் இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பஜ்ரங் தளம் தலைவர் மகேந்திர குமார், நிஜகுணநந்த சுவாமி, நிதுமாமிடி வீரபத்ரா சென்னாமலா சுவாமி, பிராகாஷ் ராஜ், ஞானபிரகாஷ் அசுரி சுவாமி, சேட்டன் குமார், பி.டி.லலித் நாயக், பேராசிரியர் மகேஷ் சந்திர, பேராசிரியர் பகவான்,தினேஷ் அமின், சந்திரசேகர் பாட்டீல், தண்டி கணேஷ், ரவுடிஅக்னி ஸ்ரீதர், பிரிந்தா காரத்(கம்யூனிஸ்ட்), ஹெச்டி குமாரசாமி ஆகியோர் பெயர் அந்த கடிதத்தில் உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT