Published : 26 Jan 2020 08:25 AM
Last Updated : 26 Jan 2020 08:25 AM

பாஜக எதிர்ப்பாளர்களுக்கு நகர்ப்புற நக்சல் முத்திரை: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

மக்களிடையே பகைமை உணர்வை ஏற்படுத்தும் பாஜகவின் செயல்திட்டத்தை எதிர்ப்பவர்கள் ‘நகர்ப்புற நக்சல்’ என முத்திரை குத்தப்படுகின்றனர் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் பீமா கோரேகானில் கடந்த 2017 டிசம்பர் 31-ம் தேதி நடந்த ‘எல்கார் பரிஷத்’ நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர்கள் வன்முறையை தூண்டும் வகையில் பேசியதால் அங்கு கலவரம் வெடித்ததாக காவல் துறையினர் குற்றம்சாட்டினர். இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற சமூக செயற்பாட்டாளர்கள், இடதுசாரி ஆதரவாளர்கள் பலர் மீது புனே போலீஸார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

இந்நிலையில் இவர்கள் மீதான அனைத்து வழக்குகளையும் உத்தவ் தாக்கரே தலைமையிலான புதிய அரசு வாபஸ் பெற தயாராகி வருவதாக தகவல் வெளியானது. இந்த வழக்குகளின் தற்போதைய நிலை தொடர்பான ஆய்வுக்கூட்டத்தை புனே போலீஸ் அதிகாரிகளுடன் மகாராஷ்டிர அரசு கடந்த வியாழக்கிழமை நடத்தியது. இந்த நிலையில் பீமா கோரேகான் வழக்குகளை மத்திய அரசு நேற்று முன்தினம் என்ஐஏ வசம் ஒப்படைத்தது.

இதற்கு மகாராஷ்டிர அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை அரசியல்சட்ட விரோதமானது எனவும் குற்றம் சாட்டியுள்ளது.

இந்நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று தனது ட்விட்டர் பதிவில், “மக்களிடையே பகைமை உணர்வை ஏற்படுத்தும் பாஜகவின் செயல்திட்டத்தை எதிர்ப்பவர்கள் நகர்ப்புற நக்சல் என அழைக்கப்படுகின்றனர். பீமா கோரேகான் என்பது அரசாங்கத்தின் என்ஐஏ கைக்கூலிகளால் ஒருபோதும் அழிக்க முடியாத எதிர்ப்பின் அடையாளமாகும்” என்று கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x