Published : 25 Jan 2020 08:40 PM
Last Updated : 25 Jan 2020 08:40 PM

நம்முடன் இருந்தவர்கள் நம் மீது நடத்திய தாக்குதலையும் முறியடித்துள்ளோம்: பாஜக மீது சிவசேனா சூசகமாகத் தாக்கு

மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு அவரது கட்சியினர் பாராட்டு விழா நடத்தினர்.

இந்தப் பாராட்டு விழாவில் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே பேசியதாவது:

இன்று நான் இதற்கு முன் வந்த அனைத்து ஜனவரி 23-ந் தேதியையும் நினைத்து பார்க்கிறேன். நான் சில மாதங்களுக்கு முன்பே முதல்வராகப் பதவி ஏற்ற போதும், இதுவரை எந்த பாராட்டையும் ஏற்றுக்கொள்ளவில்லை. எனினும் இந்த பாராட்டை நான் ஏற்றுக்கொண்டேன். ஏனெனில் இது எனக்கான பாராட்டு அல்ல. உங்களுக்கானது. சவால்களை கண்டு நான் எப்போதும் அஞ்சியது கிடையாது. ஆனால் எனக்கு உங்களது ஆதரவும், ஒத்துழைப்பும் தேவை.

வெளியாட்கள் மட்டும் அல்ல நம்முடன் இருந்தவர்கள் (பாஜக) நம் மீது நடத்திய தாக்குதலையும் பாதுகாப்பு கவசத்தால் வீழ்த்தி உள்ளோம்.

சமீபகாலமாக நாம் காவியை விட்டுவிட்டதாக பல்வேறு விமர்சனங்கள் எழுகின்றன. நிச்சயமாக இல்லை. நாம் மாறவில்லை. நான் நமது பழைய அரசியல் எதிரிகளுடன் சேர்ந்து புதிய அரசியல் பாதையை தேர்வு செய்தேன். அதற்காக நமது நிறத்தை மாற்றவில்லை. தற்போதும் நமது கட்சியின் நிறமும், உள் உணர்வும் காவி தான். இதுபோன்ற பொறுப்பை ஏற்றுக்கொள்வேன் என கனவில் கூட நான் நினைத்து பார்த்தது இல்லை.

நான் முதல்வர் ஆவேன் என எப்போதும் பால்தாக்கரேவுக்கு வாக்குறுதி அளித்தது இல்லை. ஆனாலும் நான் என்னுடைய பொறுப்புகளில் இருந்தோ அல்லது போர் களத்தில் இருந்தோ பின்வாங்கி ஓடியது இல்லை. நான் அழமாட்டேன். ஆனால் போராடுவேன், என்றார் உத்தவ் தாக்கரே.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x