

ஆந்திர தலைநகர் அமராவதி சர்ச்சை விவகாரத்தில் முந்தைய தெலுங்குதேச ஆட்சிக்காலத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களிடம் இருந்து 200 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் வாங்கப்பட்டதாக பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பினாமி பெயரில் மோசடி நடந்துள்ளதாக கூறி அம்மாநில போலீஸார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆந்திராவின் தலைநகராக அமராவதி நகரை உலகத்தரம் வாய்ந்த நகராக உருவாக்க வேண்டும் என்பது முன்னாள் முதல்வர், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவின் கனவுத்திட்டமாகும்.
இதற்காக விவசாயிகளிடம் இருந்து கடந்த 2015-ம் ஆண்டு 33 ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு, அவர்களுக்கு இழப்பீடும் அறிவிக்கப்பட்டது. ஏறக்குறைய ரூ.1 லட்சம் கோடி மதிப்பீட்டில் அமராவதி நகரம் கிருஷ்ணா நதிக்கரையின் ஓரத்தில் ஏறக்குறைய உருவாக்கப்பட்டுவிட்டது. இந்த சூழலில் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைமையில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சிக்கு வந்தார்.
முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி வந்தபின், அமராவதி நகரில் நடந்துவரும் பல்வேறு கட்டுமான திட்டங்களில் ஊழல் நடப்பதாகக் கூறி அந்தத் திட்டங்களை நிறுத்தினார். அந்த நிறுவனங்களின் ஒப்பந்தத்தையும் ரத்து செய்தார்.
இது தொடர்பாக ஒப்பந்த நிறுவனங்கள் ஆந்திர அரசுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து அந்த வழக்கும் விசாரணையில் இருக்கிறது. இந்த சூழலில் கடந்த ஆண்டு டிசம்பர் 17-ம் தேதி முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி வெளியிட்ட அறிவிப்பில், ஆந்திர மாநிலத்துக்கு அமராவதி தவிர்த்து இன்னும் இரு தலைநகரங்கள் உருவாக்கப்படும் என அறிவித்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நிலம் வழங்கிய விவசாயிகளும், எதிர்க்கட்சிகளும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் அமராவதி தலைநகரம் உருவாக்குவதில் நடந்த ஊழல் குறித்து விசாரித்து வரும் அமராவதி தலைநகரத்துக்காக நிலம் வழங்கி விவசாயிகள் உள்ளிட்ட சிலரிடம் நடத்தி விசாரணையில் வறுமைக்கோட்டிற்கு கீழ், அதாவது மாதம் 5 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான வருமானம் கொண்ட நபர்கள் 786 பேர் 200 கோடி ரூபாய் மதிப்பலான நிலம் வாங்கியதாக பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. பான் கார்டு கூட இல்லாத அவர்கள் ரொக்கப் பணம் கொடுத்து இந்த நிலங்களை வாங்கியதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது. இதையடுத்து பினாமி பெயரில் நிலம் வாங்கியதாக முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட தெலுங்குதேசம் கட்சியின் நிர்வாகிகள் மீது ஆந்திர போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.