Published : 21 Jan 2020 03:10 PM
Last Updated : 21 Jan 2020 03:10 PM

வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாளில் கூட்டம்: சிறப்பு அனுமதி வழங்க எதிர்ப்பு: காத்திருக்கும் கேஜ்ரிவால்

டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்ய வந்தபோது கடைசி நாள் என்பதால் கடும் கூட்டம் காணப்படுகிறது. அவருக்கு சிறப்பு அனுமதி வழங்க போலீஸார் முனைந்தபோது அதற்கு மற்ற வேட்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

டெல்லியில் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. 70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவையின் பதவிக்காலம் பிப்ரவரி மாதம் 22-ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, புதிய அரசை தேர்வு செய்வதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் தேதி: பிப்ரவரி 8-ம் தேதி டெல்லி சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 11-ம் தேதி நடைபெறுகிறது. பல்வேறு கட்சிகளும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன.

ஆம் ஆத்மி சார்பில் முதல்வர் கேஜ்ரிவால் மீண்டும் புதுடெல்லி தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்வதாக அறிவித்து இருந்தார்.

அதன்படி, நேற்று அவர் தனது வீட்டில் தாய், தந்தையரிடம் ஆசி பெற்று விட்டு கட்சி நிர்வாகிகள், சக அமைச்சர்கள் புடை சூழல திறந்த வாகனத்தில் வாக்கு சேகரித்தவாறே வேட்புமனுத் தாக்கல் செய்ய புறப்பட்டார்.

செல்லும் வழியில் கட்சித் தொண்டர்கள், மக்கள் திரண்டதால் அவர்களிடம் வாக்கு சேகரித்தவாறே கேஜ்ரிவால் சென்றார். பல இடங்களில் சென்றதால் அவர் வேட்புமனு தாக்கல் செய்யும் இடத்தை சென்றடைய தாமதமானது.

மாலை 3 மணிவரை மட்டுமே வேட்புமனுத் தாக்கல் செய்ய முடியும். ஆனால் கேஜ்ரிவால் அங்கு வந்து சேர 3 மணிக்கு மேலாகி விட்டது. இதனால் தேர்தல் அதிகாரி அங்கிருந்து சென்று விட்டார். காலதாமதமாகி விட்டதால் நாளையே வேட்புமனு தாக்கல் செய்ய முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து அவர் இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்வதாக அறிவித்தார். அதன்படி வேட்புமனுத் தாக்கலுக்கு கட்சி நிர்வாகிகளுடன், தாய், தந்தையரையும் அழைத்து வந்தார்.

வேட்புமனுத் தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் அலுவலகத்தில் ஏராளமான வேட்பாளர்கள் குழுமிருந்தனர். கடுமையான கூட்ட நெரிசல் காணப்பட்டது. இதையடுத்து கேஜ்வாலின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அவரை முன்கூட்டியே வேடபுமனுத் தாக்கல் செய்ய போலீஸார் ஏற்பாடு செய்தனர்.

ஆனால் அதற்கு மற்ற வேட்பாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் எனவும், கேஜ்ரிவாலும் சாதாரண வேட்பாளர் தான் எனவும் வாதிட்டனர். இதையடுத்து வரிசைப்படியே வேட்புமனுத் தாக்கல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. இதனால் கேஜ்ரிவால் அலுவலகத்தில் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x