Published : 20 Jan 2020 11:49 AM
Last Updated : 20 Jan 2020 11:49 AM
ஜெகத் பிரகாஷ் நட்டா என்ற முழு பெயர் கொண்ட ஜே.பி. நாட்டா வளர்ந்தது, படித்தது பிஹார் மாநிலம் பாட்னாவில் தான். அவரது தந்தை அங்கு பணியாற்றியதால் பள்ளி படிப்பு முதல் கல்லூரி படிப்பு வரை அங்கேயே படித்தார்.
எனினும் பின்னர் அவரது குடும்பம் சொந்த மாநிலமான இமாச்சல பிரதேசத்துக்கு திரும்பியது. அவர் சட்டப்படிப்பை இமாச்சலப் பிரதேசத்தில் படித்தார்.
இளமை முதல் ஆர்எஸ்எஸ் அமைப்பில் ஈடுபாடு கொண்ட அவர், அதன் சார்பு அமைப்புகளில் பணியாற்றி பின்னர் பாஜகவில் இணைந்தார்.
கடந்த 1993, 1998-ம் ஆண்டுகளில் அவர் பாஜக சார்பில் இமாச்சலப் பிரதேச மாநில எம்எல்ஏவாக தேர்வானார். 2007-ம் ஆண்டு முதல்வர் பிரேம் குமார் துமல் தலைமையிலான அரசு அமைந்தபோது மாநில அமைச்சரானார். 2010-ம் ஆண்டு வரை அமைச்சர் பொறுப்பை வகித்த அவர் பிறகு தேசிய அரசியலுக்கு சென்றார்.
2012-ம் ஆண்டு மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வான அவர், பாஜகவின் தேசிய பொறுப்புகளை கவனித்து வந்தார். கட்சியின் உயர் மட்ட அமைப்பான ஆட்சிமன்றக் குழுவில் இடம் பிடித்த அவர் தொடர்ந்து கட்சி பணியாற்றினார்.
கடந்த மோடி அரசில், சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சராக இருந்த நட்டா இந்த முறை அமைச்சரவையில் இல்லை. 2019-ம் ஆண்டு பொதுத் தேர்தலில் வெற்றி பெறறு மோடி 2-ம் முறை பிரதமான பிறகு பாஜக தலைவர் அமித் ஷா மத்திய அமைச்சரைவயில் இணைந்ததால் கட்சி பணிகளை கவனிக்க செயல் தலைவர் பதவி உருவாக்கப்பட்டு அந்த பொறுப்பு ஜே.பி.நட்டாவுக்கு வழங்கப்பட்டது.
அதுமுதலே அடுத்த தலைவர் பதவிக்கு அவரே தேர்வு செய்யப்படுவார் என தகவல்கள் வெளியாகின.
பாஜக மூத்த தலைவர்களின் அன்பையும், மரியாதையையும், நம்பிக்கையையும் பெற்றவர். குறிப்பாக ஆர்எஸ்எஸ் அமைப்பின் நம்பிக்கையை ஜே.பி.நட்டா பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
56 வயதான ஜே.பி. நட்டா எந்தவிதமான விமர்சனத்துக்கும் உள்ளாகாதவர் என்பதால் தலைவர் பதவிக்கு நட்டா தேர்வு செய்யப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT