

மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக உஸ்மானியா பல்கலைக்கழக பேராசிரியர் சிந்தாகின்டி காசிம் கைது செய்யப்பட்டார். அவரை கைது செய்யவிடாமல் தடுத்த 20 மாண வர்கள் போலீஸ் பிடியில் உள் ளனர்.
தடை செய்யப்பட்ட தெலங்கானா மாவோயிஸ்ட் தீவிரவாத அமைப்பின் ஓர் அங்கமாக புரட்சிகர எழுத்தாளர்கள் கூட்டமைப்பு செயல்படுகிறது. இந்த கூட்டமைப்பின் செயலாளராக உஸ்மானியா பல்கலைக்கழக பேராசிரியர் சிந்தாகின்டி காசிம் அண்மையில் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் மாவோயிஸ்ட் தீவிரவாத அமைப்பின் மூத்த தலைவர்களுடன் அவர் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார்.
இதுகுறித்து போலீஸார் விசாரித்து நேற்று சிந்தாகிண்டி காசிமை கைது செய்தனர். அவர் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஹைதராபாத்தில் உள்ள அவரது வீட்டில் போலீஸார் 5 மணி நேரம் சோதனை நடத்தினர். இதில் முக்கிய ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. பேராசிரியரை கைது செய்ய விடாமல் தடுத்ததாக 20 மாணவர்கள் பிடிபட்டனர். அவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:
கடந்த 2016-ம் ஆண்டில் முளுகு போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஒரு விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தை ஏற்படுத்திய நபர், மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுக்கு முக்கிய ஆவணங்கள், துண்டு பிரசுரங்களை எடுத்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. அந்த நபர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் பேராசிரியர் காசிம் பெயரை குறிப்பிட்டார். அப்போது முதலே பேராசிரியரை கண்காணித்து வந்தோம். போதிய ஆதாரங்கள் கிடைத்திருப்பதால் இப்போது அவரை கைது செய்துள்ளோம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.