Published : 18 Jan 2020 07:13 PM
Last Updated : 18 Jan 2020 07:13 PM
குடியுரிமைச் சட்டத்தை எதிர்ப்பவர்கள் பாகிஸ்தான், வங்கதேசத்தில் இருந்து அடைக்கலம் தேடி வரும் தலித் சமூகத்தினருக்கு எதிரானவர்கள் என பாஜக தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித் ஷாக கூறினார்.
மத்திய அரசு குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து சட்டமாக்கியுள்ளது. இந்த சட்டத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க, குடியுரிமை திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த சட்டத்துக்கு வடகிழக்கு மாநிலங்களில், மேற்கு வங்கம், டெல்லி, பிஹார் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த சட்டத்துக்கு கேரளா, மேற்குவங்கம் உட்பட பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
குறிப்பாக காங்கிரஸ் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்தநிலையில் கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அமித் ஷா கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
‘‘குடியுரிமைச் சட்டத்தை எதிர்ப்பவர்களிடம் நான் கேட்க விரும்புவது இது தான். பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானில் பெரும் கொடுமைக்கு ஆளாகி இந்தியாவில் அடைக்கலம் கோரும் தலித் மக்களுக்கு குடியுரிமை வழங்க இந்த சட்டம் வகை செய்கிறது. நீங்கள் ஏன் தலித் மக்களுக்கு எதிராக செயல்படுகிறீர்கள்’’ எனக் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT