Last Updated : 17 Jan, 2020 05:29 PM

 

Published : 17 Jan 2020 05:29 PM
Last Updated : 17 Jan 2020 05:29 PM

நிர்பயா வழக்கு: குற்றவாளிகள் 4 பேரைத் தூக்கிலிடும் தேதி புதிதாக அறிவிப்பு

டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா கூட்டுப் பலாத்கார வழக்கில், தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் 4 பேருக்கும் தண்டனையை நிறைவேற்றும் புதிய தேதியை டெல்லி நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.

டெல்லி நீதிமன்றம் முன்பு பிறப்பித்த உத்தரவில் வரும் 22-ம் தேதி 4 பேருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்ற உத்தரவிட்டிருந்த நிலையில், குற்றவாளிகளில் ஒருவர் முகேஷ் சிங் கோரிக்கையை ஏற்று பிப்ரவரி 1-ம் தேதி காலை 6 மணிக்கு 4 பேருக்கும் தூக்கு தண்டனையை நிறைவேற்ற நீதிபதி சதீஸ் குமார் அரோரா உத்தரவிட்டார்

கடந்த 2012-ம் ஆண்டு டெல்லியில் 23 வயதான மருத்துவ மாணவி ஓடும் பேருந்தில் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டு கீழே வீசப்பட்டார். பாதிக்கப்பட்ட மாணவிக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டபோதிலும், சிகிச்சை பலன் அளிக்காமல் உயிர் இழந்தார்.

இந்தச் சம்பவத்தில் ராம் சிங், முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்சய் குமார் சிங் மற்றும் ஓர் இளம் குற்றவாளி என 6 பேரை டெல்லி போலீஸார் கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்ட ராம் சிங் திஹார் சிறையில் தற்கொலை செய்து கொண்டார். 2013 செப்டம்பரில் இந்த வழக்கில் டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், இளம் குற்றவாளிக்கு 3 ஆண்டுகள் சிறையும், முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா மற்றும் அக்சய் குமார் ஆகியோருக்கு மரண தண்டனையையும் நீதிமன்றம் விதித்தது. டெல்லி நீதிமன்றத் தீர்ப்பை உயர் நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது. தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்த வழக்கை விசாரித்த டெல்லி விசாரணை நீதிமன்ற நீதிபதி சதீஸ் அரோரா இம்மாதம் 22-ம் தேதி காலை 7 மணிக்குள் குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனையை நிறைவேற்ற, கடந்த 7-ம் தேதி உத்தரவிட்டார்.

இந்நிலையில், தங்களுக்கு அளிக்கப்பட்ட தண்டனையை மறுசீராய்வு செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் முகேஷ் சிங் மற்றும் வினய் குமார் சர்மா ஆகியோர் மறுசீராய்வு மனுக்களைத் தாக்கல் செய்தனர். ஆனால் மறுசீராய்வு மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய கருணை மனுவும் இன்று நிராகரிக்கப்பட்டது.

இதற்கிடையே குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் குமார் சிங், தண்டனையை வரும் 22-ம் தேதி நிறைவேற்றாமல் ஒத்திவைக்க வேண்டும் எனக் கோரி டெல்லி விசாரணை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு விசாரணை நீதிமன்ற நீதிபதி சதீஸ் அரோரா முன் இன்று விசாரிக்கப்பட்டது. அரசு வழக்கறிஞர் இர்பான் அகமது வாதிடுகையில், குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங் தாக்கல் செய்த கருணை மனுவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்துவிட்டார். ஆதலால், தூக்கு தண்டனை நிறைவேற்றும் தேதியை அறிவிக்கக் கோரினார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி சதீஸ் அரோரா, பிறப்பித்த உத்தரவில், " வரும் 22-ம் தேதி குற்றம் சாட்டப்பட்ட 4 பேருக்கும் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட இருந்தது. அந்தத் தேதி மாற்றப்பட்டு, வரும் பிப்ரவரி 1-ம் தேதி காலை 6 மணிக்குத் தண்டனை நிறைவேற்றப்படும்" என அறிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x