Published : 17 Jan 2020 12:00 PM
Last Updated : 17 Jan 2020 12:00 PM

பாஜகவுடன் கூட்டணி அமைத்த பவன் கல்யாணின் ஜன சேனாக் கட்சி: 2024-ல் ஆந்திராவில் ஆட்சியைப் பிடிக்கத் திட்டம்

ஆந்திர நடிகர்-அரசியல்வாதியும் ஜன சேனாக் கட்சியின் தலைவருமான பவன் கல்யாண் இனி வரும் தேர்தல்களை பாஜக கூட்டணியுடன் சந்திப்போம் என்று அறிவித்துள்ளார். 2024-ல் ஆந்திர மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்கவே இந்தத் திட்டம் என்கிறார் அவர்.

ஆந்திர பாஜக தலைவர் சுனில் தியோதர் இதனை, “வரலாற்றுச் சிறப்பு மிக்க தினம். பாஜக-ஜன சேனா கூட்டணி அறிவிக்கப்பட்ட இந்த தினம் வரலாற்று தினமாகும்” என்று வர்ணித்துள்ளார்.

மேலும் அவர் கூறும்போது, “அரசியல் சாதியத்தை ஒழிப்போம், பாரம்பரிய ஆட்சி மற்றும் ஊழலை இருகட்சிகளும் சேர்ந்து ஒழிக்கப்பாடுபடும். ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியும் தோல்வி அடைந்துள்ளது, சந்திரபாபு நாயுடு ஆட்சி தோல்வி என்பது நிரூபிக்கப்பட்டது, எனவே இந்த இருகட்சிகளுடன் பாஜக ஒரு போதும் கூட்டு வைக்காது” என்றார்.

2014-ல் பாஜகவுடன் இணைந்து செயல்பட்டாலும் பவன் கல்யான் தேர்தலில் போட்டியிடவில்லை, 2019-ல் இடது, பகுஜன் கூட்டணிகளுடன் தேர்தலைச் சந்தித்தது ஜனசேனா. இந்நிலையில் 2024-ல் ஆந்திராவில் ஆட்சியைப் பிடிப்போம் என்கிறார் பவன் கல்யாண்.

“ஜெகன் மோகன் ரெட்டி அமராவதியை தலைநகராக சட்டப்பேரவையில் ஏற்றுக் கொண்டார். ஆனால் குறுகிய காலத்தில் அவ்வளவு பெரிய தலைநகர்ம் சாத்தியமானதல்ல என்று நான் சுட்டிக்காட்டினேன். ஆளும் கட்சி மாறினால் எதிர்காலம் பிரச்சினையாகி விடும் என்று நான் அப்போதே பயந்தேன், நான் பயந்தது போலவேதான் நடந்தது” என்றார்.

இந்நிலையில் பாஜகவுடன் எந்தவித நிபந்தனையுமின்றி பவன் கல்யாண் இணைந்து பணியாற்ற ஒப்புக் கொண்டுள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த முடிவை அடுத்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் பவன் கல்யாண் ஒரு சீரான முறையில் செயலாற்றக்கூடியவர் அல்ல என்று கூறியுள்ளது. இதே பவன் கல்யாண் தான் மோடி ஆந்திராவுக்கு கெட்டுப்போன லட்டுக்களை கொடுத்தார் என்று கூறினார். இப்போது என்ன மாறிவிட்டது?, என்று சாடியுள்ளது.

2019-ல் பவன் கல்யாணின் ஜன சேனா 7%க்கும் குறைவான வாக்குகளையே பெற்றது, பாஜகவுக்கு 1%க்கும் குறைவான வாக்குகளே கிடைத்தது, நாம் ஏன் இந்த கூட்டணியைப் பற்றிக் கவலைப் படவேண்டும் என்று ஒய்.எஸ்.ஆர். கட்சியினர் கிண்டலாகத் தெரிவித்துள்ளனர்.

சர்ச்சைக்குரிய குடியுரிமைத் திருத்தச் சட்டம் குறித்து பவன் கல்யாண் கூறும்போது, இது முஸ்லிம்களுக்கு எதிரானதல்ல என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x