Published : 16 Jan 2020 03:14 PM
Last Updated : 16 Jan 2020 03:14 PM

ரூ.45,000 கோடி நீர்மூழ்கிக் கப்பல் திட்டத்துக்காக அதானி குழுமத்திற்கு மோடி அரசு சாதகம் செய்கிறது: காங்கிரஸ் கடும் குற்றச்சாட்டு 

75-I நீர்மூழ்கிக் கப்பல் திட்டத்திற்காக விதிமுறைகளை மீறி பிரதமர் நரேந்திர மோடி அரசு இந்த ரூ.45,000 கோடி திட்டத்தில் அதானி குழுமத்திற்கு சாதகமாக நடந்து கொண்டதாக காங்கிரஸ் கடும் குற்றச்சாட்டை எழுப்பியுள்ளது.

இதற்காக வரையறுக்கப்பட்ட விதிமுறைகளையும் கட்டுப்பாடுகளையும் மோடி அரசு மீறியுள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியது.

இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சுர்ஜேவாலா கூறும்போது, ராணுவத் தளவாடக் கொளுமுதல் நடைமுறை (டிடிபி) யையும் மீறி, இதற்காகவென்றே உள்ள இந்தியக் கப்பற்படையின் ‘அதிகாரம் வழங்கப்பட்ட கமிட்டி’யின் பரிந்துரைகளையும் மீறி அதானி குழுமத்திற்கு இந்த ஒப்பந்தத்தை அரசு வழங்கியுள்ளது என்று குற்றம்சாட்டினார்.

“ரூ.45,000 கோடி நீர்மூழ்கிக் கப்பல் திட்டத்திற்காக அதானி குழுமத்திற்கு சாதகமாக மத்திய அரசு நடந்து கொண்டுள்ளதா? மோடி அரசு தன் தொழிலதிபர் நண்பர்களையும், குரோனி கேப்பிடலிஸ்ட்களையும் ஆதரிக்கிறதா? இதற்காக 2016ம் ஆண்டு விதிமுறைகளை மீறுகிறதா? இந்தியக் கடற்படையின் அதிகாரம் வழங்கப்பட்ட கமிட்டியின் பரிந்துரைகளை மீறி அதானிக்கு ஒப்பந்தம் வழங்கியுள்ளதா மோடி அரசு? என்று சுர்ஜேவாலா கேள்விகளை அடுக்கினார்.

ஆனால் இது தொடர்பாக இன்னமும் அரசோ, அதானி குழுமமோ பதில் எதையும் தெரிவிக்கவில்லை.

இந்த ஒப்பந்தத்தை பெற வேண்டுமெனில் இரண்டு முக்கிய அளவுகோல்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று கூறிய காங்கிரஸ், 6 நீர்மூழிக் கப்பல் தயாரிக்க பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் கிரெடிட் ஏ ரேட்டிங் பெற்றிருக்க வேண்டும். பாதுகாப்பு அமைச்சகம் ஸ்பெஷல் பர்பஸ் வெஹிக்கிள் என்பதை அனுமதித்திருக்க வேண்டும் என்று கூறுகிறது.

மேலும் காங்கிரஸ் கட்சியின் தகவல்களின் படி இந்தியக் கடற்படையின் அதிகார வழங்கல் கமிட்டி இந்தத் திட்டத்துக்காக பொதுத்துறை நிறுவனமான மஸகான் டாக்ஸ் கப்பல் கட்டுமான நிறுவனத்தையும் தனியார் துறை நிறுவனமான எல் & டி நிறுவனத்தையும் பரிந்துரை செய்ததாக கூறுகிறது.

மாறாக கிரெடிட் ஏ ரேட்டிங் இல்லாத கப்பல் கட்டுமானத்தில் அனுபவம் இல்லாத அதானி குழுமத்திற்கு மத்திய மோடி அரசு சாதகம் செய்யவிருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. மேலும் மோடி அரசு இதற்கெல்லாம் பதில் கூறட்டும் என்று கூறினார் சுர்ஜேவாலா.

-சிறப்புச் செய்தியாளர், தி இந்து ஆங்கிலம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x