Published : 15 Jan 2020 05:38 PM
Last Updated : 15 Jan 2020 05:38 PM

நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் 22-ம் தேதி தூக்கு தண்டனையை நிறைவேற்ற இயலாது: உயர் நீதிமன்றத்தில் டெல்லி அரசு தகவல்

நிர்பயா கூட்டுப் பலாத்கார வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் வரும் 22-ம் தேதி தூக்கு தண்டனையை நிறைவேற்ற இயலாது என்று உயர் நீதிமன்றத்தில் டெல்லி மாநில அரசு தெரிவித்துள்ளது.

கடந்த 2012-ம் ஆண்டு டெல்லியில் அந்தக் கொடூரம் நடந்தது. 23 வயதான மருத்துவ மாணவி ஓடும் பேருந்தில் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டு சாலையில் வீசப்பட்டார். பாதிக்கப்பட்ட மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டபோதிலும், சிகிச்சை பலன் அளிக்கமால் உயிர் இழந்தார்.

இந்தியாவை உலுக்கிய இந்தக் குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட ராம் சிங், முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்சய் குமார் சிங் மற்றும் ஓர் இளம் குற்றவாளி என 6 பேரை டெல்லி போலீஸார் கைது செய்தனர்.

குற்றம் சாட்டப்பட்ட ராம் சிங் திஹார் சிறையில் தற்கொலை செய்து கொண்டார். மற்றவர்களுக்கான வழக்கு விசாரணை நடந்து 2013-ம் ஆண்டு செப்டம்பரில் டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. குற்றம் சாட்டப்பட்ட அனைவரது மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், இளம் குற்றவாளிக்கு 3 ஆண்டுகள் சிறையும், மற்ற நால்வருக்கு மரண தண்டனையும் விதிக்கப்பட்டது.

டெல்லி நீதிமன்றத் தீர்ப்பை உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது. மேலும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மறுசீராய்வு செய்யக்கோரி தாக்கல் செய்த மனுவையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இம்மாதம் 22-ம் தேதி காலை 7 மணிக்குள் குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்ற உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. வரும் 22-ம் தேதி அவர்கள் தூக்கிலிடப்போவது உறுதியானது.

இந்நிலையில் குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங் தனது தண்டனையைக் குறைக்கக் கோரி குடியுரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பி இருப்பதால், தண்டனை வரும் 22-ம் தேதி நிறைவேற்றப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிர்பயா வழக்கில் குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங் நேற்று தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பியுள்ளார். மேலும் விசாரணை நீதிமன்றம் விதித்த ப்ளாக் வாரண்டை நீக்கக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

அவரது மனு, உயர் நீதிமன்ற நீதிபதிகள் மன்மோகன், சங்கீதா திங்ரா ஆகியோர் முன் இன்று விசாரணைக்கு வந்தது. டெல்லி அரசு சார்பில் வழக்கறிஞர் ராகுல் மேஹ்ரா ஆஜரானார். நான்கு பேரின் தூக்கு தண்டனையை நிறைவேற்றும் தேதியை அரசு ஒத்திவைத்துள்ளதாக தெரிவித்தார்.

அவரது வாதத்தில், “நிர்பயா கூட்டுப் பலாத்கார வழக்கில் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டு தூக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ள குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங் தனது தண்டனையைக் குறைக்கக் கோரி குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அளித்துள்ளார்.

திஹார் சிறை விதிமுறைப்படி, தூக்கு தண்டனைக் கைதி ஒருவர் கருணை மனுத் தாக்கல் செய்தால், அந்த மனுவுக்குப் பதில் கிடைக்கும் வரை அதாவது, குடியரசுத் தலைவர் முடிவு செய்யும் வரை தண்டனை நிறைவேற்றப்படாது. குடியரசுத் தலைவரும் கருணை மனுவைத் தள்ளுபடி செய்த பின்புதான் தண்டனை நிறைவேற்றப்படும். குடியரசுத் தலைவர் கருணை மனு மீது எந்த முடிவும் எடுக்காவிட்டால், குற்றவாளிகள் 4 பேருக்கும் வரும் 22-ம் தேதி தண்டனை நிறைவேற்றப்படாது.

குற்றவாளிகள் 4 பேரும் தனித்தனியாக கருணை மனுக்களைத் தந்திரமாக தாக்கல் செய்து, தங்கள் தண்டனையைத் தள்ளிவைத்து வருகின்றனர். இது சட்டத்தின் செயல்பாட்டையே வேதனைக்குள்ளாக்குகிறது” எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி நிருபர்களிடம் இன்று கூறுகையில், “ குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குற்றவாளி முகேஷ்சிங்கின் கருணை மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும். குறித்த தேதியில் 4 பேருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும்” என வலியுறுத்தினார்.

இந்த வழக்கில் தூக்கு தண்டனையை நிறைவேற்றக் கோரி விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய முடியாது என்று டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துவிட்டது. மேலும், மனுதாரரான முகேஷ் சிங் விசாரணை நீதிமன்றத்தை அணுகி, தனது கருணை மனுவைக் காரணம் காட்டி தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x