

மகாராஷ்டிராவில் மலிவுவிலையில் உணவளிக்கும் சிவபோஜன் சாப்பாடு திட்டம் வரும் ஜனவரி 26 முதல் தொடங்கப்பட உள்ளதாக சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு மலிவு விலையில் உணவுகளை வழங்க 'அம்மா உணவகம்' தொடங்கப்பட்டது, மக்கள் மத்தியில் இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதைத்தொடர்ந்து ஆந்திராவில் 'அண்ணா கேண்டீன்' தொடங்கப்பட்டது. ஆனால் தற்போது அண்ணா கேண்டீனில் முறைகேடுகள் நடப்பதாகக் கூறப்பட்டு தற்போது அந்த திட்டம் நிறுத்திவைக்கப்பட்டது. புதிய பொலிவோடு மீண்டும் இத்திட்டம் தொடங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இன்னும் தொடங்கப்படவில்லை.
இந்நிலையில் மகாராஷ்டிராவில் புதியதாக பொறுப்பேற்றுள்ள சிவசேனா காங்கிரஸ் கூட்டணி அரசாங்கம் மக்களுக்கு மலிவு விலையில் மதிய சாப்பாட்டை வழங்கக்கூடிய 'சிவபோஜன்' உணவுத் திட்டம் தொடங்கியுள்ளது. இத்திட்டம் வரும் ஜனவரி 26 முதல் மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் தொடங்கப்பட உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உணவு மற்றும் சிவில் வழங்கல் அமைச்சர் சாகன் பூஜ்பால் கூறியதாவது:
ரூ 10 'சிவ்போஜன்' உணவு திட்டம் ஜனவரி 26 ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது சிவ்போஜன் திட்டத்தை நடத்துவதற்கு
மக்களுக்கு மலிவு விலையில் நல்ல சாப்பாடு வழங்க மகாராஷ்டிரா அரசு திட்டமிட்டுள்ளது. அவ்வகையில் சிவ்போஜன் உணவு திட்டத்தின்கீழ் ஒரு சாப்பாடு ரூ.10க்கு வழங்கப்படும். சிவ்போஜன் திட்டத்தை அமல்படுத்த பெண்களின் சுய உதவிக்குழுக்களை நியமிக்க மாநில அரசு விரும்புகிறது. பதிவுகளை பராமரிக்க மற்றும் ஒருங்கிணைப்புக்கு உதவ ஒரு சிறப்பு மென்பொருளை அரசாங்கம் தயாரிக்க உள்ளது.
இதுபோன்ற 50க்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்களை மாநிலத்தில் பல இடங்களிலும் திறக்க திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக சிவ்போஜன் திட்டம் மாநிலத்தின் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகங்களிலும் தொடங்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் சாகன் பூஜ்பால் தெரிவித்தார்.