

பாகிஸ்தான் எல்லையில் ஆளில்லா விமானத்தை எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எப்) வீரர்கள் சுட்டு வீழ்த்தினர்.
கடந்த செப்டம்பரில் 'காலிஸ்தான் ஜிந்தாபாத்' படையை சேர்ந்த தீவிரவாதிகளை பஞ்சாப் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஏகே 47 ரக துப்பாக்கிகள், கைத்துப்பாக்கி, செயற்கைக்கோள் தொலைபேசிகள், கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவை பாகிஸ்தானில் இருந்து சிறிய ரக ஆளில்லா விமானங்கள் மூலம் அனுப்பப்பட்டதாக கைதான தீவிரவாதிகள் வாக்குமூலம் அளித்தனர்.
ஆயுதங்கள் மட்டுமன்றி போதை பொருட்களும் ஆளில்லா விமானங்கள் மூலம் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு கடத்தப்பட்டு வருகிறது. இதை தடுக்கஎல்லையில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாபின் பெரோஸ்பூர் மாவட்டம், தெண்டிவாலா பகுதியில் பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய பகுதியில் நேற்று முன்தினம் இரவு ஆளில்லா விமானம் அத்துமீறி பறந்தது. அந்த விமானத்தை எல்லை பாதுகாப்புப் படை (பி.எஸ்.எப்.) வீரர்கள் சுட்டு வீழ்த்தினர்.
ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) மூலம் நடத்தப்படும்தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருவதால் இந்தியாவில் ட்ரோன்களை வைத்திருப்போர் வரும் 31-ம் தேதிக்குள்பதிவு செய்ய வேண்டும் என்று மத்திய விமானப் போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.