Published : 14 Jan 2020 05:18 PM
Last Updated : 14 Jan 2020 05:18 PM
எலக்ட்ரானிக் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு (ஈ.வி.எம்) தடை கோரியும், தேர்தல்களில் வாக்குச் சீட்டுகளைத் திரும்பக் கொண்டுவருவதற்கும் உத்தராகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 41 வயது நபர் ஒருவர் நாடு தழுவிய பாதயாத்திரையில் ஈடுபட்டுள்ளார்.
உத்தராகண்ட் மாநிலத்தில் ருத்ராபூரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ஒன்கர் சிங் தில்லான், ஈவிஎம் இயந்திரங்களுக்கு தடை விதிக்கும் கோரிக்கையை முன்னெடுக்கும் விழிப்புணர்வுக்காக கடந்த ஆகஸ்ட் மாதம் பாதயாத்திரை புறப்பட்டார்.
தில்லான் திருமணமானவர். விளையாட்டுத் துறையிலும் ஆர்வம் உள்ளவர். தனது உடமைகளை சாலையில் தான் இழுத்துச்செல்லும் வண்டியிலேயே வைத்துள்ளார். சாலையில் செல்லும் மக்களின் கவனத்தை ஈர்க்க வண்டியில் அனைத்து பக்கங்களிலும் இரண்டு தேசிய கொடிகள் மற்றும் சுவரொட்டிகள் உள்ளன
ஒடிசாவின் பெர்ஹாம்பூர் நகரத்திற்கு ஞாயிற்றுக்கிழமை மாலை அவர் வந்தபோது நடைபயணத்தின் ஒரு பகுதியாக அவர் 4,500 கி.மீ.தொலைவு கடந்திருந்தார்.
அவர் தனது அடுத்த பயணத்தை மீண்டும் தொடங்கிட திங்களன்று இந்த தெற்கு ஒடிசா நகரத்தை விட்டு வெளியேறிபோது அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஒன்கர் சிங் தில்லான் கூறியதாவது:
''ஈவிஎம்களை தடை செய்ய வேண்டும். ஆட்சிக்கு வரும் கட்சிகள் ஈ.வி.எம்-களை தவறாகப் பயன்படுத்தி ஆட்சிக்கு வரக் கையாண்டிருக்கலாம், ஆனால் இது நாட்டிற்கும் அதன் மக்களுக்கும் நல்லதல்ல.
பல நாடுகளில், வளர்ந்த நாடுகளில் கூட தேர்தல்களில் ஈ.வி.எம் கள் பயன்படுத்தப்படுவதில்லை. நான் ஒருபோதும் தேர்தலில் போட்டியிட்டதில்லை. ஆனால் ஈ.வி.எம் இயந்திரங்களைக் கையாள்வது குறித்து பயப்படுகிறேன். தேர்தல்களில் மீண்டும் வாக்குச் சீட்டுகளைத் திரும்பக் கொண்டுவர வேண்டுமென்பதுதான் எனது கோரிக்கை. இதைப்பற்றி யாராவது கேட்டாலும் எனது விளக்கத்தை அவர்களுக்கு தெரிவித்து வருகிறேன்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 18 ஆம் தேதி உத்தரகண்ட் மாநிலம் ருத்ராபூரிலிருந்து தனது பாதயாத்திரை தொடங்கினேன். மார்ச் கடைசி வாரத்தில் அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் 6,500 கி.மீ. தொலைவு கடக்கும்போது டெல்லி ராஜ்காட்டில் பாதயாத்திதை நிறைவு பெறும்.
ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், ஹரியானா, புது தில்லி, உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகண்ட் ஆகிய சில முக்கிய நகரங்களை உள்ளடக்கி இந்த பாத யாத்திரையில் ஈடுபட்டு வருகிறேன். இங்கு வருவதற்கு முன்பு ஏற்கனவே 4,500 கி.மீ தூரத்தை கடந்துவிட்டேன்.
தற்போது ஒடிசாவில் இருக்கிறேன். இங்கிருந்து மேற்கு வங்கம், ஜார்கண்ட், பீகார் மற்றும் உத்தரபிரதேசம் மற்றும் பின்னர் புதுடெல்லி ஆகிய மாநிலங்களுக்குச் செல்ல உத்தேசம்.
ஒடிசா உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்களில் வழியெங்கும் எனது பயணத்தின் நோக்கத்தை புரிந்துகொண்டு மக்கள் அன்பாக என்னை வரவேற்கின்றனர். நெரிசலான இடங்களில்கூட மக்கள் என்னை அவர்கள் கவனிக்கின்றனர்.
அவர் சுமார் 4500 கி.மீ தூரத்தில் கால்நடையாகச் சென்றிருந்தாலும், எந்த பிரச்சினையும் இல்லை. பாத யாத்திரைக்கு பொருத்தமானதாக எனது உடல்நிலை உள்ளது. ஒவ்வொருநாளும் 35 முதல் 40 கி.மீ. தூரம் வரை நடந்து செல்கிறேன்.
இவ்வாறு ஒன்கர் சிங் தில்லான் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT