

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜேன்யு) கடந்த 5-ம் தேதி நடந்த வன்முறை தொடர்பான ஆதாரங்களை பாதுகாக்க கோரி தொடரப்பட்ட வழக்கில் டெல்லி அரசு, நகர போலீஸார் மற்றும் வாட்ஸ் அப், கூகுள், ஆப்பிள் நிறுவனங்கள் பதில் அளிக்குமாறு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக ஜேஎன்யு-வின் 3 பேராசிரியர்கள் தொடர்ந்தவழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் நீதிபதி பிரிஜேஷ் சேத்தி முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது டெல்லி போலீஸ் தரப்பில் வாதிடும்போது, “வன்முறை தொடர்பான கண்காணிப்பு கேமரா பதிவுகளை பாதுகாத்து ஒப்படைக்கும்படி ஜேஎன்யு நிர்வாகத்துக்கு கடிதம் எழுதினோம். அதற்கு இதுவரை பதில் இல்லை. 2 வாட்ஸ் அப் குழுக்கள் வன்முறையை திட்டமிட்டதாக தெரியவந்துள்ள நிலையில் அந்தக்குழுக்கள் தொடர்பான தகவல்களை அளிக்கும்படி வாட்ஸ்அப் நிறுவனத்தை கேட்டுக்கொண்டுள்ளோம். இது தொடர்பாக நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தால் தகவல்களை நாங்கள் விரைவாக பெற முடியும்” என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கில் வாட்ஸ் அப், பேஸ்புக், ஆப்பிள் மற்றும் கூகுள்நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி,வழக்கை ஒரு நாள் தள்ளிவைத்தார்.
இதனிடையே ஜேஎன்யு கலவர வழக்கில் ஜேஎன்யு மாணவர் சங்கத் தலைவர் அய்ஷே கோஷ் மற்றும் மாணவர்கள் பங்கஜ் மிஸ்ரா, வஸ்கர் விஜய் மெக் ஆகியோரிடம் டெல்லி போலீஸார் நேற்று விசாரணை நடத்தினர்.