Published : 13 Jan 2020 04:40 PM
Last Updated : 13 Jan 2020 04:40 PM

சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சிகள் கூட்டம்: திருமாவளவன் பங்கேற்பு; திமுக பங்கேற்கவில்லை

குடியுரிமைச் சட்டம், ஜேஎன்யு தொடர்பாக விவாதிப்பதற்காக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்றக் கூட்டத்தில் 20 கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூட்டத்தில் பங்கேற்ற நிலையில் திமுக தரப்பில் யாரும் பங்கேற்கவில்லை.

மத்திய அரசு குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து சட்டமாக்கியுள்ளது. இந்த சட்டத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க, குடியுரிமை திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால், முஸ்லிம்களுக்கு இந்த சட்டத்தில் இடம் அளிக்கப்படவில்லை.

கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பாக வந்துள்ளவர்கள் குடியுரிமை பெறத் தகுதியானவர்களாகக் கருதப்படுவர் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த சட்டத்துக்கு வடகிழக்கு மாநிலங்களில், மேற்கு வங்கம், டெல்லி, பிஹார் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.

பல்வேறு கட்சிகள், அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்தநிலையில் குடியுரிமைச் சட்டம் தொடர்பான போராட்டத்தை ஒருங்கிணைக்கும் வகையில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ள இந்த கூட்டத்தில் பங்கேற்கப்போவதில்லை என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஏற்கெனவே அறிவித்து இருந்தார்.

இந்த விவகாரத்தில் தனித்தே போராடுவோம் என அவர் கூறியிருந்தார். இதுபோலவே பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியும் கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டோம் என தெரிவித்து இருந்தார். இதனைத் தொடர்ந்து இந்த கூட்டத்தை புறக்கணிக்க ஆம் ஆத்மி கட்சியும் முடிவு செய்தது.

இந்தநிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்றக் கூட்டத்தில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் பங்கேற்றனர்.

தேசியவாத காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள், ராஷ்ட்ரீய ஜனதாதளம், தேசிய மாநாடு, மக்கள் ஜனநாயக கட்சி, மதச்சார்பற்ற ஜனதாதளம், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். எனினும் திமுக தரப்பில் யாரும் பங்கேற்கவில்லை. விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூட்டத்தில் பங்கேற்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x