Published : 31 Aug 2015 08:50 PM
Last Updated : 31 Aug 2015 08:50 PM
மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட புகழ்பெற்ற கன்னட எழுத்தாளரும் ஹம்பி பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தருமான எம்.எம்.கல்புர்கியின் குடும்பத்தினருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டுள்ளது.
இதுதொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கடந்த பிப்ரவரி மாதம் கொல்ஹாபூரில் சிந்தனைவாதி கோவிந்த் பன்சாரேவும், 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் புணே நகரில் மற்றொரு சிந்தனைவாதி நரேந்திர தபோல்கரும் மர்ம நபர்களால் கொல்லப்பட்டனர்.
அதே பாணியில் கர்நாடக மாநிலம் தார்வாட் நகரில் கல்யாண் நகரில் வசித்து வந்த கல்புர்கியை மர்ம நபர்கள் 2 பேர் நேற்று முன்தினம் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுள்ளனர். இந்த சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. கல்புர்கியை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.
இதன் பின்னணியில் ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்த பயங்கரவாதிகள் இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. எனவே, இந்தக் குற்றச் செயலில் தொடர்புடையவர்களை கைது செய்ய கர்நாடக அரசும் போலீஸாரும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT