Last Updated : 13 Jan, 2020 12:19 PM

 

Published : 13 Jan 2020 12:19 PM
Last Updated : 13 Jan 2020 12:19 PM

ராமகிருஷ்ணா மிஷனில் பிரதமர் பேச்சு: அரசியல் பேசியதாக மிஷன் உறுப்பினர்கள் எதிர்ப்பு

கொல்கத்தாவில் உள்ள பேலூர் ராமகிருஷ்ணா மடத்தில் பேசிய பிரதமர் மோடி குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதா குறித்து பேசியது ராமகிருஷ்ணா மடத்தின் உறுப்பினர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அரசியல் தொடர்பில்லாத மடத்தில் அரசியல் கருத்துக்களை பேசுவது தவறு என்று மடத்தினுள் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. ராமகிருஷ்ணா மிஷன் உறுப்பினர்கள் சிலர் மோடியை ஏன் பேச அழைக்க வேண்டும் என்று ராமகிருஷ்ணா மிஷன் அதிகாரிகளுக்கு எழுத்து மூலம் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அரசியல் கட்சிகளும் மோடியின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆனால் ராமகிருஷ்ணா மிஷன் மோடியின் கருத்திடமிருந்து தங்களை தொலைவுபடுத்திக் கொண்டது.

குடியுரிமைச் சட்டம் குடியுரிமை வழங்குவது யாருடைய குடியுரிமையையும் பறிப்பதல்ல என்று பிரதமர் மோடி பேசியது ராமகிருஷ்ண மிஷன் உறுப்பினர்களிடத்திலும் மேற்கு வங்கத்தின் சில தரப்பினரிடமிருந்தும் எதிர்ப்புகளைக் கிளப்பியுள்ளன.

இது தொடர்பாக ராமகிருஷ்ணா மிஷன் உறுப்பினர் கவுதம் ராய் கூறும்போது, “இரண்டு விஷயங்களை நான் குறிப்பிட விரும்புகிறேன், ராமகிருஷ்ணா மிஷன் மிகவும் விரிவான அதிகாரப்பூர்வ புனிதமாக்க நடவடிக்கைகளைக் கொண்டுள்ளது. மோடிக்கு அதிகாரப்பூர்வமாக தீட்சை அளிக்கப்படவில்லை, மேலும் அரசியல் ரீதியான கருத்துக்களை அவர் இங்கு பேச அனுமதி கிடையாது. கடந்த சில ஆண்டுகளாக ராமகிருஷ்ணா மிஷன் அரசியல்மயமாகி வருகிறது. முன்பு ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்துடன் தொடர்புடைய மூத்த ஆன்மிக தலைவர்கள் நியமிக்கப்படுகின்றனர், பதவி உயர்வு அளிக்கப்பட்டு வருகின்றனர். பிரதமர் மோடியின் வருகை இத்தகைய போக்கின் ஒரு பகுதியே.

ராமகிருஷ்ணா மிஷனின் மூத்த சன்னியாசிகள் சிலரும் ஞாயிறன்று பக்தர்களைச் சந்திப்பாதாக இருந்து பிறகு வேலையிருப்பதாக சந்திப்பு நிகழ்ச்சியை ரத்து செய்தனர். இதையும் கூட சில பக்தர்கள் சன்னியாசிகளின் அதிருப்தியின் வெளிப்பாடே என்றனர்.

விமர்சனங்கள், எதிர்ப்புகள் குறித்து ராமகிருஷ்ணா மிஷன் பொதுச் செயலலாளரான சுவாமி சுவிரானந்தா கூறும்போது, “சிஏஏ குறித்து பிரதமர் பேசியது பற்றி ராமகிருஷ்ணா மிஷன் கருத்துக் கூற விரும்பவில்லை, இது கண்டிப்பான அரசியல் தொடர்பில்லாத அமைப்பு. நிலையான கடவுளின் அழைப்பினால் நாங்கள் எங்கள் வீடுகளை விட்டு இந்தத் திருப்பணிக்கு வந்துள்ளோம், நிலையற்ற அழைப்புகளுக்கு நாங்கள் பதிலளிக்க மாட்டோம்.

ராமகிருஷ்ணா மிஷன் அனைவரையும் உள்ளடக்கிய ஓர் அமைப்பு. இங்கு இந்து, இஸ்லாம், கிறித்துவ மதங்களிலிருந்தும் வந்துள்ள சாமியார்கள் இருக்கின்றனர். ஒரே பெற்றோருக்குப் பிறந்த சகோதரர்கள் போல் வாழ்கிறோம். எங்களைப் பொறுத்தவரை நரேந்திர மோடி என்பவர் இந்தியாவின் தலைவர், மம்தா பானர்ஜி மேற்கு வங்கத்தின் தலைவர்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x