Last Updated : 12 Jan, 2020 03:50 PM

 

Published : 12 Jan 2020 03:50 PM
Last Updated : 12 Jan 2020 03:50 PM

போராட்டத்தை ஆதரித்ததற்காக தீபிகாவின் சினிமாவை பார்க்கக்கூடாது என புறக்கணிப்பதா? - சிவசேனா மூத்த தலைவர் கண்டனம்

பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே ஜேஎன்யூ மாணவர்களின் போராட்டத்திற்கு நேரில் சென்று தனது ஆதரவைத் தெரிவித்தார் என்பதற்காக அவர் நடித்த சபாக் படத்தை ஏன் புறக்கணிக்க வேண்டும் என்று பாஜக ஆதரவாளர்களுக்கு சிவசேனாவின் மூத்த தலைவரும் எம்.பியுமான சஞ்சய் ராவத் கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த செவ்வாய் அன்று புதுடெல்லி ஜேஎன்யூ மாணவர் விடுதிக்குள் நுழைந்த முகமூடி அணிந்த மர்மநபர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் என அனைவர் மீதும் கடுமையான தாக்குதல் நடத்தியுனர். இதில் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மர்ம நபர்களின் இத் தாக்குதலைக் கண்டித்து நாடெங்கும் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். தாக்குதலுக்கு ஆளான மாணவர்கள் உள்ளிட்ட ஜேஎன்யூ மாணவர்கள் பலரும் நடத்திய பேராட்டத்தின்போது இரவு 7.30 மணிக்கு பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே வந்து மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார்.

தீபிகா படுகோனே மாணவர்களின் போராட்டத்தில் நேரில் சென்று ஆதரித்தததை பல்வேறு கட்சிகளும் ட்விட்டராட்டிகளும் வரவேற்ற அதேநேரம் பாஜகவினரும் அவர்களது ஆதரவார்களும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பாஜக தலைவர்களில் சிலரும்கூட நடிகையின் ஜேஎன்யூ வருகையை விமர்சித்தனர். இடதுசாரிகளை ஆதரிப்பதாக தீபிகாவை விமர்சித்த சிலர் இது அவரது சமீபத்திய படமான 'சபாக்' இன் விளம்பர ஸ்டண்ட் என்று இன்னும் சிலர் கூறினர்.

இதனைத் தொடர்ந்து #boycottchhapaak என்ற ஹேஷ்டேக் டிரெண்டானது. அதே நேரம் இதற்கு மாறாக #IsupportDeepika என்ற ஹேஷ்டேக்கும் சமூக வலைதளங்களில் டிரெண்ட்டானது.

தீபிகா படுகோனே நடித்து மேக்னா குல்சார் இயக்கிய சபாக் வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வந்தது. மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய இடங்களில் உள்ள காங்கிரஸ் ஆட்சி மாநிலங்களிலும் இந்த திரைப்படத்திற்கு வரி விலக்கு என்று அறிவித்தன.ஒரு திரைப்படத்தை வரி விலக்கு என்று அறிவிப்பது என்பது அரசு விதித்த பொழுதுபோக்கு வரியை தள்ளுபடி செய்வதாகும், இதன் மூலம் டிக்கெட் கட்டணத்தை குறைத்து, அதைப் பார்க்க அதிகமான மக்களை ஊக்குவிப்பதாகும்.

இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள சிவசேனாவின் மூத்த தலைவரும் மாநிலங்களவை எம்.பியுமான சாம்னாவின் ஆசிரியருமான சஞ்சய் ராவத் கூறியுள்ளதாவது:

தீபிகா படுகோனே நடித்த படத்தை புறக்கணிக்கவேண்டும் என்று சிலர் கோரி வருகின்றனர். இதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆசிட் தாக்குதலில் இருந்து தப்பிய லக்ஷ்மி அகர்வாலின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு முக்கியமான படத்தை புறக்கணிக்க அழைப்பு விடுப்பது மிகவும் தவறானது ஆகும்.

எதற்கெடுத்தாலும் தொடர்ந்து இதேமுறையில் நாட்டை தலிபான் பாணியில் நடத்தமுடியாது.

இவ்வாறு சஞ்ச் ராவத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x