Published : 11 Jan 2020 04:49 PM
Last Updated : 11 Jan 2020 04:49 PM

சிஏஏ, ஜேஎன்யு; காங்கிரஸ் காரியக் கமிட்டி ஆலோசனை: ராகுல் காந்தி பங்கேற்கவில்லை

குடியுரிமைச் சட்ட எதிர்ப்பு, ஜேஎன்யு பல்கலைக்கழக வன்முறை உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக காங்கிரஸ் காரியக் கமிட்டி கூடி ஆலோசித்து வருகிறது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்கவில்லை.

மத்திய அரசு குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து சட்டமாக்கியுள்ளது. இந்த சட்டத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க, குடியுரிமை திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த சட்டத்துக்கு வடகிழக்கு மாநிலங்களில், மேற்கு வங்கம், டெல்லி, பிஹார் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

இதுபோலவே டெல்லியில் உள்ள ஜேஎன்யு பல்கலைக்கழக வளாகத்தில் இடதுசாரி அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் அமைதிப் பேரணியில் பங்கேற்றனர். அப்போது, முகமூடிகளை அணிந்தபடி வந்த மர்ம நபர்கள் சிலர், இரும்புக் கம்பி உள்ளிட்ட ஆயுதங்களுடன் பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைந்து பேரணியில் ஈடுபட்டிருந்த மாணவர்களைக் கண்மூடித்தனமாகத் தாக்கினர். இதனைக் கண்டித்து நாடுமுழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

இந்த விவகாரங்கள் தொடர்பாக காங்கிரஸ் காரியக் கமிட்டி கூடி ஆலோசித்து வருகிறது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் பிரியங்கா காந்தி உட்பட மூத்த தலைவர்கள் பலர் பங்கேற்றுள்ளனர். எனினும் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்கவில்லை.

இதுபோலவே டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாகவும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x