‘‘நாடே உங்கள் பின்னால் நிற்கிறது’’ - ஜேஎன்யு மாணவர் தலைவரை சந்தித்து பினராயி விஜயன் ஆதரவு

‘‘நாடே உங்கள் பின்னால் நிற்கிறது’’ - ஜேஎன்யு மாணவர் தலைவரை சந்தித்து பினராயி விஜயன் ஆதரவு
Updated on
1 min read

ஜேஎன்யு மாணவர் போராட்டத்தை தொடர்ந்து மாணவர் சங்கத் தலைவர் ஆயிஷ் கோஷை கேரள முதல்வர் பினராயி விஜயன் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

டெல்லியில் உள்ள ஜேஎன்யு பல்கலைக்கழக வளாகத்தில் இடதுசாரி அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் அமைதிப் பேரணியில் பங்கேற்றனர். அப்போது, முகமூடிகளை அணிந்தபடி வந்த மர்ம நபர்கள் சிலர், இரும்புக் கம்பி உள்ளிட்ட ஆயுதங்களுடன் பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைந்து பேரணியில் ஈடுபட்டிருந்த மாணவர்களைக் கண்மூடித்தனமாகத் தாக்கினர்.

இதனைத் தடுக்கச் சென்ற மற்ற மாணவர்கள் மீதும் அவர்கள் தாக்குதல் நடத்தினர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் போலீஸார் உடனடியாக அங்கு வந்தனர். ஆனால், போலீஸாரைக் கண்டதும் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.

இந்தத் தாக்குதலில் பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் ஆயிஷ் கோஷ் உட்பட 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பலத்த காயமடைந்தனர். இந்தத் தாக்குதல் சம்பவத்துக்கு பாஜக ஆதரவு ஏபிவிபி அமைப்பினரும், இடதுசாரி அமைப்பினரும் ஒருவரையொருவர் மாறி மாறிக் குற்றம் சாட்டி வருகின்றனர்.

ஜேஎன்யு பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதைக் கண்டித்து நாட்டின் பல பகுதிகளிலும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மாணவர் சங்கத் தலைவர் ஆயிஷ் கோஷை கேரள முதல்வர் பினராயி விஜயன் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். டெல்லி கேரளா இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்தது. அப்போது ‘‘இந்த நாடுமுழுவதும் ஜேஎன்யு மாணவர்களின் பின்னால் உள்ளது. நீதிக்காக போராடும் மாணவர்களுக்கு ஆதரவளிப்போம். நீதிக்கான உங்கள் போராட்டம் வெல்லும். ஜேஎன்யு மாணவர்களின் போராட்டத்தை சங்க பரிவார் அமைப்புகள் நசக்க முயலுகின்றன. ஆனால் நீதிக்கான இந்த போராட்டத்தில் மாணவர்கள் வெல்வார்கள்.’’ எனக் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in