

குடியுரிமைச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி, ஹைதராபாத் உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் இன்று போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
மத்திய அரசு குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து சட்டமாக்கியுள்ளது. இந்த சட்டத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க, குடியுரிமை திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால், முஸ்லிம்களுக்கு இந்த சட்டத்தில் இடம் அளிக்கப்படவில்லை.
கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பாக வந்துள்ளவர்கள் குடியுரிமை பெறத் தகுதியானவர்களாகக் கருதப்படுவர் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த சட்டத்துக்கு வடகிழக்கு மாநிலங்களில், மேற்கு வங்கம், டெல்லி, பிஹார் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்கள் நடந்து வருகின்றன..
இந்தநிலையில் டெல்லி, ஹைதராபாத் உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் இன்று போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. டெல்லி ஜூம்மா மசூதி முன்பு தொழுகை முடிந்து வெளியே வந்த இஸ்லாமியர்கள் கூடி குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக ஆர்ப்பாடம் நடத்தினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அதுபோலவே ஹைதராபாத்தில் அந்த தொகுதி எம்.பி. அசாதுதீன் ஒவைசியின் ஏஐஎம்எஐஎம் கட்சி மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் போராட்டம் நடைபெற்றது.