

பிரதமர் மோடி மத்திய பட்ஜெட் தொடர்பாக ஆலோசனை நடத்தி வருவது தனது முதலாளித்துவ நண்பர்களுக்காக தான் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
வரும் பிப்ரவரி 1-ம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.
ஆனால், இந்த முறை பிரதமர் அலுவலகம் பட்ஜெட் தொடர்பான பணிகளை வெறும் மேற்பார்வையிடாமல் பிரதமர் மோடியை நேரடியாக களத்தில் இறங்கி பணிகளைக் கவனித்து வருகிறார் என்று பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நிதி ஆயோக்கில் பொருளாதார வல்லுநர்களிடம் நேரடியாக ஆலோசனையில் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் இந்திய பொருளாதார வளர்ச்சியின் தேக்கநிலைக்கு என்ன காரணம், பொருளாதாரத்தை இயல்புப் பாதைக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி ஆலோசித்தார். மேலும், தொழில்துறையினர், நிறுவனத் தலைவர்களையும் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
தொழில்துறை தலைவர்கள், பெருநிறுவனங்களின் தலைவர்கள் ஆகியோருடன் சமீபத்தில் இருமுறை பிரதமர் மோடி நேரடியாக உரையாடினார். அப்போது அவர்களின் தேவைகள், பொருளாதாரத்தின் நிலவரம் உள்ளிட்ட பல்வேறு விவரங்களையும், அவர்களின் கருத்துக்களையும் பிரதமர் மோடி கேட்டறிந்துள்ளார்.
இந்த சந்திப்பின் போது, தொழில்துறைத் தலைவர்கள், பெரு நிறுவனங்களின் தலைவர்கள்அளித்த ஆலோசனைகள், கருத்துக்கள், பிரச்சினைகளைக் களைய அளித்த ஆலோசனைகளைப் பிரதமர் மோடி பொறுமையாகக் கேட்டறிந்தார்.
மேலும், ஒவ்வொரு துறையும் அடுத்த 5ஆண்டுகளுக்கான செயல்திட்டம் அதாவது என்ன செய்யப் போகிறோம் என்ற வரைவு அறிக்கையைத் தயாரித்து அளித்த அமைச்சர்களுக்குப் பிரதமர் மோடி உத்தரவிட்டிருந்தார். இந்த திட்டங்கள் குறித்து அனைத்து அமைச்சர்களுடன் விரிவாக ஆலோசனை நடத்தி வருகிறார்.
பட்ஜெட் குறித்து மக்களின் கருத்தும் அறிய வேண்டும், மக்களும் தங்களின் கருத்துக்களையும், ஆலோசனைகளையும், கோரிக்கைகளையும் அறிய வேண்டும் என்பதற்காகத் தனி இணையதளத்தையும் மோடி அறிவித்துள்ளார்.
பட்ஜெட்டுக்கு இன்னும் 3 வாரங்கள் இருக்கும் நிலையில், ஒவ்வொரு துறையிலும் இருக்கும் சிக்கல்கள், அதைக் களைவதற்கான திட்டங்கள், பொருளாதாரத்தை மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டுவர வேண்டும் என்ற நோக்கில் பிரதமர் மோடி மிகுந்த தீவிரமாக இறங்கி ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
இதுபற்றி காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.
இதுகுறித்து இன்று ராகுல் காந்தி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:
‘‘பிரதமர் மோடி மத்திய பட்ஜெட் தொடர்பாக ஆலோசனை நடத்தி வருவது பணக்காரர்கள் மற்றும் தனது முதலாளித்துவ நண்பர்களுக்காக தான். விவசாயிகள், மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், அரசு மற்றும் பொதுத்துறை ஊழியர்கள், சிறு வர்த்தகர்கள், நடுத்தர வர்க்கத்தினர் பற்றி அவருக்கு எந்த கவலையும் இல்லை’’ எனக் கூறியுள்ளார்.