Published : 07 Jan 2020 06:22 PM
Last Updated : 07 Jan 2020 06:22 PM

நிர்பயா வழக்கு: குற்றவாளிகள் 4 பேருக்கு ஜனவரி 22ம் தேதி காலை 7 மணிக்கு மரண தண்டனை - டெல்லி நீதிமன்றம் உத்தரவு

நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கு 22-ந்தேதி காலை 7 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16-ந்தேதி மருத்துவ மாணவி ஒருவர் ஓடும் பஸ்சில் 6 பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட 6 பேரை டெல்லி போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில் ஆறு பேரும் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் அறிவித்தது. ஆறு பேரில் ஒருவர் சிறார் என்பதால் அவர் சிறார் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டார். மீதமுள்ள 5 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. 5 பேரில் முக்கிய குற்றவாளியான ராம்சிங், டெல்லி திகார் சிறைக்குள் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்பட்டது.

இதனால் மற்ற 4 பேர் சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டனர். ஆனால் உச்ச நீதிமன்றம் 4 பேரின் தூக்கு தண்டனையை உறுதிசெய்தது.

இந்நிலையில் டெல்லி நீதிமன்ற கூடுதல் அமர்வு நீதிபதி சதீஷ் குமார் அரோரா, குற்றவாளிகளான முகேஷ் (32), பவன் குப்தா (25), வினய் சர்மா (26), அக்‌ஷய் குமார் சிங் (31)ஆகியோருக்கு ஜனவரி 22ம் தேதி காலை 7 மணிக்குத் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் என்று உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில், நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கு 22-ந்தேதி காலை 7 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுகிறது. மேலும் குற்றவாளிகள் தங்களது சட்ட தீர்வுகளை 14 நாட்களுக்குள் பயன்படுத்தலாம் என கூறி உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x