சிஏஏ: விவரங்களை கேட்டால் தராதீர்கள்: மேற்குவங்க மக்களுக்கு மம்தா பானர்ஜி வலியுறுத்தல்

சிஏஏ: விவரங்களை கேட்டால் தராதீர்கள்: மேற்குவங்க மக்களுக்கு மம்தா பானர்ஜி வலியுறுத்தல்
Updated on
1 min read

குடியுரிமைச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு தொடர்பாக யாரும் விவரங்களை கேட்டால் அவர்களுக்கு எந்த தகவலையும் தராதீர்கள் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறினார்.

மத்திய அரசு குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து சட்டமாக்கியுள்ளது. இந்த சட்டத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க, குடியுரிமை திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால், முஸ்லிம்களுக்கு இந்த சட்டத்தில் இடம் அளிக்கப்படவில்லை.

கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பாக வந்துள்ளவர்கள் குடியுரிமை பெறத் தகுதியானவர்களாகக் கருதப்படுவர் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த சட்டத்துக்கு வடகிழக்கு மாநிலங்களில், மேற்கு வங்கம், டெல்லி, பிஹார் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. பல்வேறு மாநிலங்களிலும் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன.

இந்தநிலையில் மேற்குவங்க மாநிலம் 24 பர்கானா மாவட்டத்தில் உள்ள பதர் பிரதிமாவில் நடந்த பேரணியில் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

‘‘மேற்குவங்க மாநிலத்தில் குடியுரிமைச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு என எதுவும் செயல்படுத்தப்படாது. யாராவது உங்களிடம் இதுதொடர்பாக விவரங்களை கேட்டால் அவர்களுக்கு எந்த தகவலையும் தராதீர்கள். எதை பற்றியும் தகவல் சொல்ல வேண்டாம். உங்கள் உரிமையை யாராலும் பறிக்க முடியாது. அப்படி உங்கள் உரிமை பறிக்கப்பட்டால் அது எனது சடலத்தின் மீது தான் நடக்கும்.’’ எனக் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in