Published : 06 Jan 2020 02:34 PM
Last Updated : 06 Jan 2020 02:34 PM

ஜேஎன்யு வன்முறை; மும்பை தீவிரவாத தாக்குதலை ஞாபகப்படுத்துகிறது: உத்தவ் தாக்கரே கண்டனம்

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடந்த தாக்குதல் சம்பவம் மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதலை ஞாபகப்படுத்துவதாக சிவசேனா தலைவரும், மகாராஷ்டிர முதல்வருமான உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் விடுதி கட்டண உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளுக்காக போராட்டம் நடைபெற்று வந்தது. இந்தநிலையில் நேற்று முகத்தில் துணியை கட்டிக் கொண்டு வந்த கும்பல் ஒன்று மாணவர்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியது. இதில் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் பேரவை தலைவர் ஆயிஷ் கோஷ், மண்டை உடைந்தது.

இந்த தாக்குதலில் காயம் அடைந்த 18 பேர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தை கண்டித்து, நாட்டின் பல்வேறு இடங்களில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த தாக்குதலின் பின்னணியில் ஆர்எஸ்எஸ் சார்பு ஏபிவிபி மாணவர் அமைப்பு இருப்பதாக ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் பேரவை யூனியன் குற்றம்சாட்டியுள்ளது. அதேநேரம் ஏபிவிபி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் ‘‘பல்கலைகழகத்தில் இடதுசாரிகள் மாணவர் அமைப்பினர் எங்கள் அமைப்பைச் சேர்ந்த மாணவர்களை கண்மூடித்தனமாக தாக்கி உள்ளனர். சுமார் 25 மாணவர்கள் கடுமையாக காயமடைந்துள்ளனர்’’ என்று குற்றம்சாட்டியுள்ளது.

ஜேஎன்யு பல்கலைக்கழகத்தில் நடந்த வன்முறை சம்பவத்தை கண்டித்து பல்வேறு பகுதிகளிலும் இன்று மாணவர்கள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகினறனர்.

சிவசேனா தலைவரும், மகாராஷ்டிர முதல்வருமான உத்தவ் தாக்கரே இதுகுறித்து கூறியதாவது:

‘‘டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடந்த தாக்குதல் சம்பவம் மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதலை ஞாபகப்படுத்துகிறது. ஜேஎன்யு பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்த தாக்குதலை தொலைக்காட்சியில் பார்த்தேன். தாக்குதல் நடத்தியவர்கள் முகமூடி அணிந்து வர வேண்டிய தேவை என்ன. அவர்கள் யார். மகாராஷ்டிராவில் இதுபோன்று மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.’’ எனக் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x