Published : 06 Jan 2020 11:47 AM
Last Updated : 06 Jan 2020 11:47 AM

ஜேஎன்யு வன்முறை: அரசே தூண்டிவிட்டதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் வன்முறையை அரசே தூண்டி விட்டதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ரண்தீப் சுர்ஜேவாலா குற்றம்சாட்டியுள்ளார்.

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் விடுதி கட்டண உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளுக்காக போராட்டம் நடைபெற்று வந்தது. இந்தநிலையில் நேற்று முகத்தில் துணியை கட்டிக் கொண்டு வந்த கும்பல் ஒன்று மாணவர்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியது. இதில் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் பேரவை தலைவர் ஆயிஷ் கோஷ், மண்டை உடைந்தது.

இந்த தாக்குதலில் காயம் அடைந்த 18 பேர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தை கண்டித்து, நாட்டின் பல்வேறு இடங்களில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த தாக்குதலின் பின்னணியில் ஆர்எஸ்எஸ் சார்பு ஏபிவிபி மாணவர் அமைப்பு இருப்பதாக ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் பேரவை யூனியன் குற்றம்சாட்டியுள்ளது. அதேநேரம் ஏபிவிபி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் ‘‘பல்கலைகழகத்தில் இடதுசாரிகள் மாணவர் அமைப்பினர் எங்கள் அமைப்பைச் சேர்ந்த மாணவர்களை கண்மூடித்தனமாக தாக்கி உள்ளனர். சுமார் 25 மாணவர்கள் கடுமையாக காயமடைந்துள்ளனர்’’ என்று குற்றம்சாட்டியுள்ளது.
இந்தநிலையில் வன்முறை சம்பவத்துக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ரண்தீப் சுர்ஜேவாலா கூறியதாவது:

‘‘டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் அரசே தூண்டிவிட்ட தீவிரவாதம் மற்றும் வன்முறை நாடே பார்த்தது. ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பெரும் வன்முறை சம்பவங்கள் நடந்தபோது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கட்டுப்பாட்டில் உள்ள டெல்லி போலலீஸார் கைகட்டி வேடிக்கை பார்த்துள்ளனர். பல்கலைக்கழக நிர்வாகமும் செயலற்று இருந்துள்ளது. இதனை விட வெட்கக்கேடான செயல் வேறெதுவும் இல்லை’’ எனக் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x