Published : 06 Jan 2020 11:25 AM
Last Updated : 06 Jan 2020 11:25 AM

ஜேஎன்யு வன்முறை: டெல்லி ஆளுநருடன் அமித் ஷா பேச்சு

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடந்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக பல்கலைக்கழக பிரதிநிதிகளை அழைத்து பேசுமாறு ஆளுநர் அனில் பைஜாலை உள்துறை அமைச்சர் அமித் ஷா கேட்டுக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் விடுதி கட்டண உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளுக்காக போராட்டம் நடைபெற்று வந்தது. இந்தநிலையில் நேற்று முகத்தில் துணியை கட்டிக் கொண்டு வந்த கும்பல் ஒன்று மாணவர்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியது. இதில் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் பேரவை தலைவர் ஆயிஷ் கோஷ், மண்டை உடைந்தது.

இந்த தாக்குதலில் காயம் அடைந்த 18 பேர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தை கண்டித்து, நாட்டின் பல்வேறு இடங்களில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த தாக்குதலின் பின்னணியில் ஆர்எஸ்எஸ் சார்பு ஏபிவிபி மாணவர் அமைப்பு இருப்பதாக ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் பேரவை யூனியன் குற்றம்சாட்டியுள்ளது. அதேநேரம் ஏபிவிபி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் ‘‘பல்கலைகழகத்தில் இடதுசாரிகள் மாணவர் அமைப்பினர் எங்கள் அமைப்பைச் சேர்ந்த மாணவர்களை கண்மூடித்தனமாக தாக்கி உள்ளனர். சுமார் 25 மாணவர்கள் கடுமையாக காயமடைந்துள்ளனர்’’ என்று குற்றம்சாட்டியுள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற இந்த வன்முறை சம்பவங்களை அறிந்து மிகவும் அதிர்ச்சி அடைகிறேன். மாணவர்கள் மிக மோசமாக தாக்கப்பட்டுள்ளனர். காவல்துறை உடனடியாக வன்முறைச் சம்பவங்களை கட்டுக்குள் கொண்டுவந்து அமைதியை நிலைநாட்ட வேண்டும். ஒரு பல்கலைக்கழக வளாகத்திற்கு உள்ளேயே மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றால், த நாடு எப்படி வளரும்’’ எனக் கூறியுள்ளார்.

இந்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக பல்கலைக்கழக பிரதிநிதிகளை அழைத்து பேசுமாறு ஆளுநர் அனில் பைஜாலை உள்துறை அமைச்சர் அமித் ஷா கேட்டுக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x