நான்கானா சாஹிப் குருத்வாரா தாக்குதல்: பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டனம்

நான்கானா சாஹிப் குருத்வாரா தாக்குதல்: பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டனம்

Published on

பாகிஸ்தானின் நான்கானா சாஹிப் குருத்வாராவில் நடந்த தாக்குதல் சம்பவத்துக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் ஸ்ரீ நான்கானா சாஹிப் குருத்வாரா உள்ளது. இது சீக்கியர்களின் முதல் குருவான குருநானக் தேவ் பிறந்த இடமாகும். சீக்கியர்களின் புனித ஸ்தலமாக இது மதிக்கப்படுகிறது.

இந்நிலையில், சீக்கியப் பெண் ஜகித் என்பவரை முகமது ஹசன் என்பவர் அவரின் வீட்டில் இருந்து கடத்திச் சென்று கட்டாயத் திருமணம் செய்து கொண்டார். திருமணம் செய்வதற்கு முன், அந்தப் பெண்ணை முஸ்லிமாக மதமாற்றியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து அறிந்த அந்தப் பெண்ணின் சகோதரர் மன்மோகன் சிங் போலீஸில் புகார் செய்தார். இந்தப் புகார் குறித்து அறிந்த முகமது ஹசன் மற்றும் அவரின் சகோதரர் முகமது இம்ரான் ஆகியோர் நேற்று மாலை குருத்வாரா பகுதிக்கு வந்து சீக்கிய யாத்ரீகர்கள் மீது கல்வீசித் தாக்கினர்.

மேலும், சீக்கிய குருத்வாராவை அடித்துவிட்டு அங்கு மசூதி கட்டப்படும் என்று ஹசனும், முகமது இம்ரானும் அங்கிருந்தவர்களை மிரட்டினர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலானது. இதற்கு பல்வேறு தரப்பிலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.


இந்தநிலையில் இந்திய வெளியுறவு அமைச்சகம் சார்பில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தை தொடர்பு கொண்டு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அதில் ‘‘பாகிஸ்தானின் பெஷாவர் மாகாணத்தில் சிறுபான்மையினரான சீக்கியர்கள் மீதான தாக்குதல் கண்டனத்துக்குரியது. சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in