Last Updated : 05 Jan, 2020 03:33 PM

 

Published : 05 Jan 2020 03:33 PM
Last Updated : 05 Jan 2020 03:33 PM

கோட்டா சம்பவத்தைத் தொடர்ந்து குஜராத் மருத்துவமனையில் 111 பச்சிளம் குழந்தைகளுக்கு மேல் உயிரிழப்பு: முதல்வர் பதிலளிக்க மறுப்பு

ராஜஸ்தானில் கோட்டா மருத்துவமனையில் 100 பச்சிளங் குழந்தைகள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, குஜராத்தின் ராஜ்கோட் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் 111 பச்சிளங் குழந்தைகளுக்கு மேல் உயிரிழந்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து முதல்வர் விஜய் ரூபானியிடம் நிருபர்கள் கேள்வி கேட்டபோது, அவர் பதில் அளிக்காமல் சென்றுவிட்டார்.

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா மாவட்டத்தில் ஜே.கே. லோன் தாய் மற்றும் சேய் நல மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. கடந்த மாதம் முதல் அந்த மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் தொடர்ந்து இறந்து வருகின்றன.

கடந்த 33 நாட்களில் அந்த மருத்துவமனையில் பலியான குழந்தைகளின் எண்ணிக்கை 110ஆக அதிகரித்துள்ளது. இதுகுறித்து ஆய்வு செய்ய மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் சார்பில் மருத்துவக் குழு சென்றுள்ளது. மேலும், ராஜஸ்தான் அரசு 4 வாரங்களுக்குள் பதில் அளிக்கக் கோரி மனித உரிமைகள் ஆணையமும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது

100க்கும் மேற்பட்ட பச்சிளங்குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தின் அதிர்ச்சி மறைவதற்குள் குஜராத்தில் ராஜ்கோட் மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் கடந்த ஒரு மாதத்தில் 110க்கும் மேற்பட்ட பச்சிளங் குழந்தைகள் இறந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து ராஜ்கோட் மாவட்டத்தில் உள்ள பண்டிட் தீனதயாள் உபாத்யாயா மருத்துவமனையின் கண்காணிப்பாளர் மணிஷ் மேத்தா கூறுகையில், " கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் இந்த மருத்துவமனையில் 111 பச்சிளங்குழந்தைகள் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளன. நவம்பர் மாதத்தில் 71 குழந்தைகளும், அக்டோபர் மாதத்தில் 87 குழந்தைகளும் உயிரிழந்துள்ளன.

உடல்நிலை மோசமான நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டுவரப்படும்போது சிகிச்சை பலனளிக்காமல் குழந்தைகள் இறந்தன. அதாவது குறைந்த எடையில் குழந்தைகள் பிறத்தல் உயிரிழப்புக்கு மிக முக்கியக்காரணமாகும். மருத்துவமனையில் என்ன மாதிரியான வசதிகள் இருக்கின்றன, என்ன வசதிகள் தேவைப்படுகிறது என்பது குறித்து மாதம் தோறும் கூட்டம் நடத்தி ஆலோசிக்கிறோம். தேவையானவற்றை உடனடியாக நிறைவேற்றுகிறோம்" எனத் தெரிவித்தார்

மருத்துவமனையில் மருத்துவர்கள் கண்காணிப்பாளர் ஜி.ஹெச் ரத்தோடு நிருபர்களிடம் கூறுகையில், " அகமதாபாத்தில் உள்ள சிவில் மருத்துவமனையில் டிசம்பர் மாதம் 85-க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்துள்ளன. நவம்பர் மாதம் 74 குழந்தைகளும், அக்டோபர் மாதம் 94 குழந்தைகளும் உயிரிழந்தன. அக்டோபர் மாதத்தோடு ஒப்பிடும்போது, குழந்தைகள் இறப்பு 18 சதவீதம் குறைந்துள்ளது.

குழந்தைகள் இறப்பிற்கு மிகமுக்கியக் காரணமே, குறைந்த எடையில் குழந்தைகள் பிறப்பதும், குறை மாத பிரசவத்தில் பிறப்பதும்தான். இதுதவிர பிறக்கும்போது திடீரென தொற்றுநோய் தாக்குதல், சுவாசக் கோளாறு போன்றவற்றாலும் இறப்பைச் சந்திக்கின்றன" எனத் தெரிவித்தார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x