Last Updated : 05 Jan, 2020 01:24 PM

 

Published : 05 Jan 2020 01:24 PM
Last Updated : 05 Jan 2020 01:24 PM

அலிகர் கண்டனக் கூட்டத்திற்கு செல்ல முயன்ற முன்னாள் ஐஏஎஸ் கண்ணன் கோபிநாதன் ஆக்ராவில் தடுத்து நிறுத்தம்

கண்ணன் கோபிநாதன்

புதுடெல்லி

நேற்று அலிகர் முஸ்லிம் பல்கலைழகத்தில் நடைபெற்ற கண்டனக் கூட்டத்தில் கலந்துகொள்ள முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கண்ணன் கோபிநாதன் சென்றார். இவரை உத்திரபிரதேசக் காவல்துறையினர் வழியில் ஆக்ராவிலேயே தடுத்து நிறுத்தி விட்டனர்.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக உபி மாநிலத்தில் போராட்டம் தீவிரமாக நடைபெறுகிறது. இதை முதன்முதலில் துவக்கி வைத்த அலிகர் முஸ்லிம் பல்கலைழகத்திலும் போராட்டம் தொடர்கிறது.

இதில் நேற்று அதன் ஜவகர்லால் நேரு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சார்பில் அங்கு டிசம்பர் 15 இல் ஏற்பட்ட கலவரத்தை கண்டித்து ஒரு கூட்டம் நடந்தது. இதற்காக, தனது ஐஏஎஸ் பதவியை ராஜினாமா செய்திருந்த கண்ணன் கோபிநாத் அழைக்கப்பட்டிருந்தார்.

காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து 370 ரத்து செய்ததை எதிர்த்து கடந்த ஆகஸ்டில் ராஜினாமா செய்தவர் கண்ணன் கோபிநாதன். 2012 ஆம் ஆண்டின் ஐஏஎஸ் அதிகாரியான கண்ணன், கேரளா மாநிலத்தில் பணியாற்றி வந்தவர்.

இந்நிலையில், ஆக்ரா வழியாக அலிகரில் நுழைய முயன்ற கண்ணனை சுமார் 40 கி.மீ முன்பாகவே உ.பி. போலீஸார் தடுத்து நிறுத்தினர். அவர் 144 தடை உத்தரவு அமலில் உள்ள அலிகரின் மத்திய முஸ்லிம் பல்கலைகழகத்திற்கு உரை நிகழ்த்தினால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை உருவாகும் எனத் தெரிவித்தனர்.

இதனால், அங்கு செல்லாதபடி ஐபிசி 106 மற்றும் 117 பிரிவின்படி கண்ணன் தடுப்புக் காவலில் வைக்கப்படுவதாகவும் தெரிவித்தனர். அவரை அருகிலுள்ள ஒரு தாபாவில் சுமார் மூன்று மணி நேரம் அமர வைத்தனர்.

பிறகு கண்ணனை அவரது சொந்த ஜாமீனில் உபி போலீஸார் விடுவித்தனர். இதையடுத்து, அதே காரில் பின் தொடர்ந்தபடி மாநில எல்லைக்கு வெளியே கண்ணனை அழைத்து சென்று திருப்பி அனுப்பி வைத்தனர்.

இது குறித்து தம் ட்விட்டர் பக்கத்தில் கண்ணன் குறிப்பிடுகையில், ‘அலிகருக்கான தடை உத்தரவை என்னிடம் ஆக்ராவிலேயே தடுத்து நிறுத்தி காட்டப்பட்டது. இந்நேரத்தில் உபி போலீஸார் என்னிடம் மிகுந்த மரியாதையுடன் நடந்து கொண்டனர்.’ எனத் தெரிவித்துள்ளார்.

கண்ணன் இல்லாமலேயே அலிகர் முஸ்லிம் பல்கலைகழக வளாகத்தின் மருத்துவக் கல்லூரியில் அந்நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கண்ணனுடன் சேர்த்து அழைக்கப்பட்டிருந்த மேலும் பல சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

இதில், சிபிஐஎம்எல் கட்சியின் அகில இந்திய முற்போக்கு மகளிர் சங்கத்தின் செயலாளரான கவிதா கிருஷ்ணன், ’சாரே ரெஹகுசார்’ அமைப்பின் சபிகா அப்பாஸ் நக்வீ, எய்ம்ஸ் மருத்துவ மாணவர்களின் முன்னாள் தலைவரான டாக்டர்.ஹர்ஜித்சிங் பாட்டி உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் இடம் பெற்றிருந்தனர்.

இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் கவிதா கிருஷ்ணன் கூறும்போது, ‘இந்த நிகழ்ச்சியில் கண்ணனை மட்டும் தடுத்து நிறுத்தியதற்கு முக்கியக் காரணம் உள்ளது. இங்கு அவர் ஆற்றும் உரையின் தாக்கமாக மேலும் ஐஏஸ், ஐபிஎஸ் போன்ற குடிமைப்பணி அதிகாரிகள் தம் பதவிகளை ராஜினாமா செய்து விடுவார்கள் அன்ற அச்சம் அரசிற்கு உள்ளது.’ எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x