Published : 04 Jan 2020 08:41 PM
Last Updated : 04 Jan 2020 08:41 PM

நான்கானா சாஹிப் குருதுவாரா தாக்குதல்: இம்ரான் கானை கட்டித்தழுவிய காங்கிரஸ் தலைவர்கள் விளக்கம் அளிக்க வேண்டும்: ஹர்சிம்ரத் கவுர் சாடல்

புதுடெல்லி

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பதவியேற்பு விழாவுக்கு சென்று அவரை கட்டித்தழுவி முத்தமிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஸ்ரீ நான்கானா சாஹிப் குருதுவாரா தாக்குதல் சம்பவத்துக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என மத்திய அமைச்சரும், அகாலிதளக் கட்சியின் மூத்த தலைவருமான ஹர்சிம்ரத் கவுர் வலியுறுத்தியுள்ளார்.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஸ்ரீ நான்கானா சாஹிப் குருதுவாராவில் நேற்று ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியதற்கு இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் விரைந்து தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் ஸ்ரீ நான்கானா சாஹிப் குருதுவாரா உள்ளது. இது சீக்கியர்களின் முதல் குருவான குருநானக் தேவ் பிறந்த இடமாகும். சீக்கியர்களின் புனித ஸ்தலமாக இது மதிக்கப்படுகிறது.

இந்நிலையில், சீக்கியப் பெண் ஜகித் என்பவரை முகமது ஹசன் என்பவர் அவரின் வீட்டில் இருந்து கடத்திச் சென்று கட்டாயத் திருமணம் செய்து கொண்டார். திருமணம் செய்வதற்கு முன், அந்தப் பெண்ணை முஸ்லிமாக மதமாற்றியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து அறிந்த அந்தப் பெண்ணின் சகோதரர் மன்மோகன் சிங் போலீஸில் புகார் செய்தார். இந்தப் புகார் குறித்து அறிந்த முகமது ஹசன் மற்றும் அவரின் சகோதரர் முகமது இம்ரான் ஆகியோர் நேற்று மாலை குருதுவாரா பகுதிக்கு வந்து சீக்கிய யாத்ரீகர்கள் மீது கல்வீசித் தாக்கினர்.

மேலும், சீக்கிய குருதுவாராவை அடித்துவிட்டு அங்கு மசூதி கட்டப்படும் என்று ஹசனும், முகமது இம்ரானும் அங்கிருந்தவர்களை மிரட்டினர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலானது.

இந்தத் தாக்குதலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் இதுகுறித்து மத்திய அமைச்சரும், அகாலிதளக் கட்சியின் மூத்த தலைவருமான ஹர்சிம்ரத் கவுர் கூறியதாவது:

பாகிஸ்தானின் ஸ்ரீ நான்கானா சாஹிப் குருதுவாராவில் நடந்த தாக்குதல் சம்பவம் வெட்கக்கேடானது. இதற்கு பாகிஸ்தான் உரிய விளக்கம் அளிக்க வேண்டும். அந்த நாட்டில் உள்ள சீக்கிய மக்களுக்கும், குருத்துவாராவுக்கும் பாதுகாப்பு அளிக்க பாகிஸ்தான் தவறி விட்டது.

இதுபற்றி காங்கிரஸ் தலைவர்கள் வாய் திறக்க மறுக்கிறார்கள். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பதவியேற்பு விழாவுக்கு சென்று அவரை கட்டித்தழுவி முத்தமிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும். அவர்கள் ஒரு வார்த்தை பேசமால் இருப்பது கண்டிக்கத் தக்கது’’ எனக் கூறினார்.

முன்னதாக பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பதவியேற்றபோது, நவ்ஜோத் சிங் சித்து உள்ளிட்டோர் சென்றது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x