Last Updated : 04 Jan, 2020 03:26 PM

 

Published : 04 Jan 2020 03:26 PM
Last Updated : 04 Jan 2020 03:26 PM

சிஏஏ-வை எதிர்க்காதீர்கள்; நாங்க 80 சதவீதம், நீங்க 18%- பாஜக எம்எல்ஏ மிரட்டல் பேச்சு

பெல்லாரியில் நடந்த கூட்டத்தில் பாஜக எம்எல்ஏ சோம்சேகர் ரெட்டி பேசிய காட்சி : படம்|ஏஎன்ஐ

பெல்லாரி,

இந்த தேசத்தில் இந்துக்கள் 80 சதவீதம் இருக்கிறார்கள், சிறுபான்மையினர் 18 சதவீதம் இருக்கிறார்கள் என்பதால், எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளுங்கள், குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்க்காதீர்கள் என்று கர்நாடக பாஜக எம்எல்ஏ சோம்சேகர் ரெட்டி மிரட்டல் விடுக்கும் தொனியில் பேசியுள்ளது சர்ச்சையாகியுள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்து குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு பல்வேறு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது. சிறுபான்மையினருக்கு எதிரானது என்ஆர்சி, குடியுரிமைத்திருத்தச் சட்டம் எனக் கருதி முஸ்லிம்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனால் இந்தியாவில் உள்ள முஸ்லிம்களுக்கு எந்தவிதத்திலும் எதிரானது இல்லை, எந்தவிதத்திலும் இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெல்லாரியில் நேற்று குடியுரிமை திருத்தச்சட்டத்துக்கு ஆதரவாக நடந்த கூட்டத்தில் பாஜக எம்எல்ஏ சோம்சேகர் ரெட்டி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
குடியுரிமைத் திருத்தச்சட்டத்துக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டுவருபவர்களுக்கு நான் சிறிய எச்சரிக்கை விடுக்கிறேன். இந்த தேசத்தில் நாங்கள் 80 சதவீதம் இருக்கிறோம், முஸ்லிம்களாகிய நீங்கள் 18 சதவீதம்தான் இருக்கிறீர்கள். நாங்கள் நினைத்தால் என்ன ஆகும் என்று சற்று சிந்தித்துப்பாருங்கள்.

பெரும்பான்மை மக்கள் வசிக்கும் நாட்டில் நீங்கள் வாழ்கிறீர்கள் என்று எச்சரிக்கையுடன் இருங்கள். இது நம்முடைய நாடு. இந்த நாட்டில் நீங்கள் வாழ வேண்டுமென்றால், ஆஸ்திரேலிய பிரதமர் சொல்வதைப் போல், இந்த தேசத்தின் பாரம்பரியங்களை மதித்து நடக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் திருப்பி அனுப்பப்படுவீர்கள்

குடியுரிமைத் திருத்தச் சட்டம் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரால் கொண்டுவரப்பட்டது. இந்த சட்டத்துக்கு எதிராகச் சென்றால், இது உங்களுக்கு நல்லதாக இருக்காது.

நீங்கள் பாகிஸ்தானுக்குச் செல்ல வேண்டும் என விரும்பினால் செல்லலாம், எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் உங்களைப் பாகிஸ்தானுக்கு அனுப்ப எங்களுக்கு எந்த உள்நோக்கமும் இல்லை. இந்துக்களுடன் ஒற்றுமையாக வாழ வேண்டும். நீங்கள் எதிரியைப்போல் நடந்தால், நாங்கள் எதிரிபோல் நடக்க வேண்டியது இருக்கும்.

காங்கிரஸ் கட்சியை நம்பாதீர்கள். அதில் இருப்பவர்கள் ஏராளமானோர் முட்டாள்கள். அவர்களை நம்பி சாலைக்கு வந்து போராட்டம் நடத்தாதீர்கள்
இவ்வாறு சோம்சேகர் ரெட்டி பேசினார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x