Last Updated : 06 Aug, 2015 08:58 PM

 

Published : 06 Aug 2015 08:58 PM
Last Updated : 06 Aug 2015 08:58 PM

பிஹாரில் பாஜக நிர்வாகி துப்பாக்கியால் சுட்டுக் கொலை: நடை பயிற்சி மேற்கொண்டபோது பரிதாபம்

பிஹார் தலைநகர் பாட்னாவில் தனது வீட்டுக்கு அருகே காலையில் நடை பயிற்சி மேற்கொண்ட பாஜக நிர்வாகி அவினாஷ் குமாரை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.

இதுகுறித்து காவல் துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, “இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள ஒரு கோயிலில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவியில் பதிவாகி உள்ளது. இதில் பதிவாகி உள்ள காட்சிகளை ஆராந்தபோது, 3 மர்ம நபர்கள் குமாரை துரத்திச்சென்று சரமாரியாக துப்பாக்கியால் சுடுகின்றனர். இதையடுத்து குண்டடிபட்ட குமார் சாலையில் சரிந்து விழுகிறார். பின்னர் ஒருவர் அருகே சென்று குமாரின் தலையில் சுட்டுவிட்டு தப்பி ஓடுகின்றனர்” என்றார்.

தப்பி ஓடிய கொலையாளிகளைப் பிடிக்க பாட்னா நகர காவல் துறை மூத்த கண்காணிப்பாளர் விகாஸ் வைபவ் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.

பாட்னா நகர பாஜக பொதுச்செயலாளரான அவினாஷ் குமாரின் வீடு தல்தாலி சாலைக்கு அருகே உள்ளது. இந்த சம்பவத்தைக் கண்டித்து அப்பகுதியில் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அடுத்த 48 மணி நேரத்தில் கொலையாளிகளை போலீஸார் கைது செய்யாவிட்டால் பெரிய அளவில் போராட்டம் வெடிக்கும் என பங்கிபூர் எம்எல்ஏ நிதின் நவீன் தெரிவித்தார்.

மேலும் பிஹார் சட்டப்பேரவையில் குமார் கொல்லப்பட்டதைக் கண்டித்து பாஜக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். அப்போது மாநிலத்தில் தேர்தல் வர உள்ள நிலையில் சட்டம் ஒழுங்கு நிலை மோசமடைந்துவிட்டதாக அவர்கள் குற்றம் சாட்டினர். இதையடுத்து அவை 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x