Published : 31 Dec 2019 02:45 PM
Last Updated : 31 Dec 2019 02:45 PM
பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்குத் தடை விதிக்கக் கோரி உத்தரப் பிரதேச மாநில டிஜிபி ஓ.பி.சிங் மாநில உள்துறைக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
சமீபத்தில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடைபெற்ற வன்முறைப் போராட்டங்களின் பின்னணியில் பாப்புலர் பிரண்ட் அமைப்பு செயல்பட்டுள்ளதாக அந்த அமைப்பு மீது குற்றச்சாட்டு எழுந்த நிலையில் தடை கோரிக்கை எழுந்துள்ளது.
இதன் மூலம் சர்ச்சைக்குரிய இந்த அமைப்பைத் தடை செய்யும் நடைமுறை தொடங்கியுள்ளது. உ.பி. உள்துறை அடுத்ததாக மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு தடை கோரிக்கையை பரிந்துரை செய்யும்.
இது தொடர்பாக துணை முதல்வர் கேஷவ் பிரசாத் மவ்ரியா செவ்வாயன்று செய்தியாளர்களிடம் கூறியபோது, “பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பைத் தடை செய்வதை மாநில அரசு முழுதும் ஆதரிக்கிறது. தடை செய்யப்பட்ட இஸ்லாமிய மாணவர் அமைப்பான சிமியைச் சேர்ந்த பலர் தற்போது பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பில் உள்ளனர். இவர்கள்தான் மாநிலத்தில் வன்முறையைத் தூண்டி விடுகின்றனர்.
இந்த அமைப்பைச் சேர்ந்த 22 பேர் சமீப போராட்டங்களுக்காகக் கைது செய்யப்பட்டுள்ளனர்” என்றார்.
உத்தரப்பிரதேசம் உட்பட பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு 7 மாநிலங்களில் செயலில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT