Published : 31 Dec 2019 08:50 AM
Last Updated : 31 Dec 2019 08:50 AM

குடியுரிமை சட்டம், குடிமக்கள் பதிவேடு குறித்து ட்விட்டரில் ஜக்கி வாசுதேவ் வீடியோவை வெளியிட்ட பிரதமர் மோடி

புதுடெல்லி

குடியுரிமை சட்டத்தை ஆதரித்து சத்குரு ஜக்கி வாசுதேவ் விளக்கம் அளித்த வீடியோவை, பிரதமர் மோடி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நாட்டின் பல பகுதிகளில் எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஈஷா யோகா மையத்தின் சத்குரு ஜக்கி வாசுதேவ் பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியில் பல தரப்பினர் பங்கேற்றனர். அதில் உத்தர பிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், ‘‘குடியுரிமை சட்டம் தொடர்பாக உ.பி.யில் போராட்டங்கள் நடக்கின்றன. அந்தச் சட்டம் என்ன என்பது குறித்து எனக்கு குழப்பமாக உள்ளது. உங்கள் கருத்து என்ன?’’ என்று ஜக்கி வாசுதேவிடம் கேள்வி எழுப்பினார்.

அதற்கு ஜக்கி வாசுதேவ் விரிவான விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:

ஒரே நாடாக இருந்த இந்தியா, 3 ஆக பிரிந்தது. அதுவும் மற்ற 2 நாடுகள் மத ரீதியாக பிரிந்தன. அதை சட்டமாகவே அங்கு அமல்படுத்தப்பட்டன. அதிர்ஷ்டவசமாக இந்தியா அப்படி மாறவில்லை. இங்கு எல்லா மதத்தினரும் ஒன்றுதான்.இந்தியாவில் சட்டத்தின் முன் அனைவரும் ஒன்றுதான். பிரிவினைக்குப் பின்னர்ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் இங்கு வந்தனர். மதரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளானவர்களுக்குமட்டும் குடியுரிமை வழங்க இப்போது சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்னரே இந்தச் சட்டம் வந்திருக்க வேண்டும்.

அதேபோல தேசிய குடிமக்கள் பதிவேடு என்பதை எல்லா நாடுகளும் பின்பற்றுகின்றன. இந்த நாட்டில் தங்கியிருப்பவர் யார் என்பதை பதிவு செய்ய வேண்டும். இங்குள்ள ஒருவரிடம் பிறந்த இடம், மூதாதையர்கள் பற்றிய விவரங்கள் கேட்கின்றனர். ஆதார், பிறப்பு சான்று, வாக்காளர் அட்டை, ரேஷன் அட்டை, மற்ற ஆவணங்கள் கேட்கின்றனர். இவற்றில் எதுவும் இல்லை என்றாலும் கூட, உங்களை பல ஆண்டுகளாக தெரிந்த 3 சாட்சிகளை கேட்கிறார். இவற்றில் எதுவும் இல்லை என்றால், நீங்கள் யார்? இந்த நாட்டில் இருக்கும் ஒவ்வொருவரும் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் விவரங்களை அளிப்பது கடமை.

இந்தச் சட்டம் குறித்த விவரங்களை பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அரசு தோல்வி அடைந்துவிட்டது என்றுதான் கருதுகிறேன். ஆனால், குடியுரிமை சட்டம் என்பது இங்குள்ளவர்களை வெளியேற்றுவது என்று தவறான தகவல்களைப் பரப்பிவிட்டனர். அந்த மிகப்பெரிய பொய், வானத்து அளவுக்கு பெரிதாகி இப்போது அடங்கியிருக்கிறது.

இவ்வாறு லக்னோ இளம்பெண்ணுக்கு ஜக்கி வாசுதேவ் விளக்கம் அளிக்கிறார். இந்த காட்சிகள் அடங்கிய வீடியோவை பிரதமர் மோடி நேற்று தனது அதிகாரப்பூர்வ ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். ‘இண்டியா சப்போர்ட்ஸ் சிஏஏ’ என்ற ஹேஷ்டேக்கில் பிரதமர் அந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அதில், ‘‘குடியுரிமை சட்டம் தொடர்பான ஜக்கி வாசுதேவின் இந்த தெளிவான விளக்கத்தை கேளுங்கள். உள்நோக்கத்துடன் பொய்யான தகவல்கள், வதந்திகள் பரப்பியதையும் அவர் சுட்டிக் காட்டி உள்ளார்’’ என்று பிரதமர் மோடி ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி மேலும் கூறுகையில், ‘‘குடியுரிமை சட்டம் என்பது மதரீதியாக பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வகை செய்கிறது. இந்தியாவில் உள்ள யாருடைய குடியுரிமையையும் பறிப்பது அல்ல’’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ‘‘குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவான கருத்துகள், கிராபிக்ஸ்கள், வீடியோக்களை ‘நமோ’ ஆப்பில் பொதுமக்கள் பகிர்ந்து கொள்ள வேண்டும்’’ என்றும் ட்விட்டரில் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x