Published : 31 Dec 2019 08:47 AM
Last Updated : 31 Dec 2019 08:47 AM

புத்தாண்டுக்கு திருப்பதியில் 2 நாட்கள் சிறப்பு தரிசனம் ரத்து

திருமலை

ஆங்கில புத்தாண்டையொட்டி, இன்றும், நாளையும் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சிறப்புதரிசனங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், அனைத்து ஆர்ஜித சேவைகளையும் இந்த 2 நாட்கள் முழுவதும் ரத்து செய்வதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறித்துள்ளது.

இதுகுறித்து கூடுதல் நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி செய்தியாளர்களிடம் பேசும்போது, “ஆங்கில புத்தாண்டு மற்றும் ஜனவரி மாதம் 6, 7 ஆகிய நாட்களில் வரும் வைகுண்ட ஏகாதசி மற்றும் துவாதசி நாளன்று, சாமானிய பக்தர்களுக்கு முன்னுரிமை வழங்கும் விதத்தில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பக்தர்களுக்காக நாராயணகிரி பகுதியில் வரிசையில் வர தனி ஷெட்கள் அமைக்கப்பட்டுள்ளன. வைகுண்ட ஏகாதசி, துவாதசிக்கும் தர்ம தரிசன டோக்கன், திவ்ய தரிசன டோக்கன்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஆன்லைன் மூலம் பெறப்பட்ட ரூ. 300 சிறப்பு தரிசன டோக்கன்கள் மூலம் மட்டும் வெறும் 5 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 6-ம் தேதி வைகுண்ட ஏகாதசியன்று அதிகாலை 2 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்படும். சாமானிய பக்தர்கள் காலை 5 மணிக்கு பின்னர் சுவாமியை தரிசனம் செய்யலாம். வைகுண்ட ஏகாதசியையொட்டி, 5-ம் தேதி 24 மணி நேரமும் மலைப்பாதை திறந்திருக்கும். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், மலைப்பாதை உட்பட பல இடங்களில் அடிப்படை வசதிகள் செய்யப்படும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x