Last Updated : 30 Dec, 2019 09:30 PM

 

Published : 30 Dec 2019 09:30 PM
Last Updated : 30 Dec 2019 09:30 PM

அலிகர் முஸ்லிம் பல்கலைழகத்தின் டிசம்பர் 15 கலவரம்: 10,000 மாணவர்கள் கைதாகத் தயாராக இருப்பதாக மாணவர் பேரவை தலைவர் அறிவிப்பு

புதுடெல்லி

அலிகர் முஸ்லிம் பல்கலைகழகத்தில் டிசம்பர் 15 போராட்டத்தில் வெடித்தக் கலவரப் பிரச்சனை ஓய்ந்தபாடில்லை. பல்கலைகழகம் திறந்தால் 10,000 மாணவர்கள் கைதாகத் தயாராக இருப்பதாக அதன் மாணவர் பேரவை தலைவர் அறிவித்துள்ளார்.

கடந்த டிசம்பர் 15 இல் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நடந்த போராட்டத்தில், ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைழகத்தின் மாணவர்கள் டெல்லி போலீஸாரால் தாக்கப்பட்டனர். இந்த சம்பவத்தை கண்டித்து உபியின் அலிகர் முஸ்லிம் பல்கலைகழகத்தின் மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

இதில் வெடித்த கலவரத்தில் உபி போலீஸார் 12000 மற்றும் மத்திய பாதுகாப்பு படையினரால் 10,000 மாணவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்துள்ளனர். கலவரத்தில் ஈடுபட்டதாக அதேதினம் 26 மாணவர்கள் கைதாகி ஜாமீனில் விடப்பட்டுள்ளனர்.

இந்த விவகாரம் மேலும் தொடரும் வகையில் இன்று அலிகர் முஸ்லிம் பல்கலைகழக மாணவர் பேரவையின் தலைவர் முக்கமது சல்மான் இம்தியாஸ் தன் முகநூலில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதில் இம்தியாஸ் குறிப்பிடுகையில், ‘பல்கலைகழகத்தை தயவுசெய்து திறந்து விடுங்கள். நாம் 10,000 மாணவர்கள் போலீஸிடம் கைதாகத் தயாராக உள்ளோம்.’ எனத் தெரிவித்துள்ளார்.

டிசம்பர் 15 கலவரத்திற்கு பின் நிர்வாகத்தினரால் அலிகர் முஸ்லிம் பல்கலைகழகத்திற்கு ஜனவரி 5 வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையிலும், அதன் மாணவிகள் சிலர் அமைதியான முறையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான தம் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

இதனிடையே, கலவரத்தன்று எடுக்கப்பட்ட சில விடீயோ பதிவுகள் வெளியாகி சர்ச்சையை கிளம்பியுள்ளது. இதில், உபி போலீஸாரும், மத்திய பாதுகாப்பு படையினராலும் வளாகத்தில் வீசப்பட்ட கண்ணீர்புகை குண்டுகளை ஒரு மாணவர் பிடித்து அவர்கள் மீது திரும்ப வீசுவது பதிவாகி உள்ளது.

இதை கைப்பற்றிய அலிகர் மாவட்ட காவல்துறை தன் தீவிர விசாரணையை தொடர்ந்து வருகிறது. இதுபோன்றவை மற்றும் சிசிடிவி பதிவுகள் மூலம் மாணவர்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க முயல்கிறது.

கலவரத்தில் 1.83 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அரசு சொத்துக்களுக்கு மாணவர்கள் சேதம் விளைவித்ததாகவும் கணக்கிடப்பட்டுள்ளது. இந்த மாணவர்களின் விலாசம் அறிந்து அவர்களின் வீட்டிற்கு அனுப்ப அழைப்பானைகளும் தயாராகி வருகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x