Last Updated : 30 Dec, 2019 06:48 PM

 

Published : 30 Dec 2019 06:48 PM
Last Updated : 30 Dec 2019 06:48 PM

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்துக்கு எதிராக காங்.நிர்வாகி போலீஸில் புகார்

ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் 130 கோடி இந்தியர்களும் இந்துக்கள் என்று பேசியது மக்களின் உணர்வுகளைப் பாதிக்கும் வகையில் இருந்ததாகக் கூறி காங்கிரஸ் நிர்வாகி வி.ஹனுமந்த ராவ் போலீஸில் புகார் அளித்துள்ளார்.

ஹைதராபாத்தில் கடந்த 25-ம் தேதி நடந்த விஜய் சங்கல்ப் சஹிர் எனும் பொதுக் கூட்டத்தில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், "தேசியவாத உணர்வும், பாரதத்தின் கலாச்சாரத்தையும் மதிக்கும் பண்பும் உள்ளவர்கள் இந்துக்கள். ஆர்எஸ்எஸ் அமைப்பு தேசத்தில் உள்ள 130 கோடி மக்களையும் இந்துக்களாகவே கருதுகிறது" என்று பேசியிருந்தார்

இதுகுறித்து காங்கிரஸ் நிர்வாகியும், முன்னாள் எம்.பி.யுமான ஹனுமந்த ராவ், எல்பி நகர் போலீஸ் நிலையத்தில் மோகன் பாகவத் மீது புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில், " ஆர்எஸ்எஸ் தலைவரின் பேச்சு முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிக்கள் நம்பிக்கையையும், உணர்வுகளை மட்டும் பாதிக்கவில்லை. அரசியலமைப்பின் மாண்புக்கு எதிராகவும் இருக்கிறது. இந்தப் பேச்சு மத உணர்வுகளை மக்களிடையே தூண்டிவிட்டு, ஹைதராபாத்தில் சட்டம் ஒழுங்கு சிக்கலை ஏற்படுத்தும்" எனத் தெரிவித்தார்.

இந்தப் புகார் குறித்து எல்.பி. நகர் போலீஸ் நிலைய ஆய்வாளர் அசோக் ரெட்டியிடம் கேட்டபோது, "ஹனுமந்த ராவ் புகாரைப் பெற்றுக்கொண்டோம். இன்னும் வழக்குப் பதிவு செய்யவில்லை. சட்ட வல்லுநர்களைக் கலந்து ஆலோசித்து வழக்குப் பதிவு செய்ய உகந்ததா என்று ஆய்வு செய்து அதன் பிறகு வழக்காக மாற்றுவோம்" எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x