Published : 30 Dec 2019 06:20 PM
Last Updated : 30 Dec 2019 06:20 PM

மத நல்லிணக்கத்துக்குச் சான்று: கேரளாவில் முஸ்லிம்களின் தொழுகைக்காக திறந்து விடப்பட்ட தேவாலயங்கள் 

கேரளாவில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்ட முஸ்லிம்களின் தொழுகைக்காக அருகில் இருந்த தேவாலயங்கள் திறந்து விடப்பட்டுள்ளன. இந்தச் செயல், மத நல்லிணக்கத்திற்குச் சான்றாக பாராட்டைப் பெற்றுள்ளது.

கேரளாவிலும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராட்டம் தொடர்கிறது. எர்ணாகுளம் மாவட்டத்தின் மூவாத்துப்புழாவில் இருந்து கொத்தமங்கலம் வரையில் 10 கி.மீ. தொலைவிற்காக நடைபயணப் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

இதன் வழியில் மாலை தொழுக்கான நேரம் நெருங்கி விட அந்த ஊர்வலத்தில் அதிக எண்ணிக்கையில் இருந்த முஸ்லிம்கள் தம் கடமையை நிறைவேற்ற விரும்பினர். மசூதி எதுவும் அருகில் இல்லை.

இதனால், ஊர்வலத்தில் இருந்த காங்கிரஸ் நிர்வாகியான மாத்யூ குலநாதன் அருகிலுள்ள பர்தோமா செரியாப்பள்ளி எனும் தேவாலயத்தை தொடர்பு கொண்டார். அதன் பேராயர் அனுமதியுடன் முஸ்லிம்களின் தொழுகைக்காக அந்த தேவாலயம் திறந்து விடப்பட்டது.

இதையடுத்து ஊர்வலம் சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது. தேவாலயத்தில் முஸ்லிம்கள் தொழுகை முடிந்ததும் ஊர்வலம் தொடர்ந்தது. சுமார் 1000 வருடங்கள் பழமையானதாகக் கருதப்படும் அந்த தேவாலயம் மத நல்லிணக்கத்திற்குப் பெரும் உதாரணமாக அமைந்துள்ளது.

இது குறித்து மாத்யூ குலநாதன் கூறும்போது, ''குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் பெயரில் மதரீதியாக மக்களை பாஜகவினர் பிரிக்கும் இந்த வேளையில் ஒரு தேவாலயம் மத நல்லிணக்கத்திற்கு உதாரணமாகி உள்ளது. இதை நாட்டு மக்கள் அனைவரும் உணர்ந்து கொண்டு அதைப் பேணிக் காக்க வேண்டும்'' எனத் தெரிவித்தார்.

இதுபோல், மத நல்லிணக்கச் சம்பவங்கள் அந்த செரியாப்பள்ளி தேவாலயத்திற்கு முதன்முறையல்ல எனத் தெரிகிறது. இதன் பிரார்த்தனை ஊர்வலங்களுக்கு அந்தப் பகுதியைச் சேர்ந்த இந்துக்களில் ஒருவரையே விளக்குடன் தலைமை ஏற்க வைப்பது வழக்கம் எனவும் அதன் பாதிரியாரான ஜோஸ் பாரத்தவயலில் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x